யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பிரதேசத்திற்குரிய கலாசார மரபுரிமைச் சின்னங்கள் : ஓர் ஆய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka
Abstract
யாழ்ப்பாணத்தின் தென்மராட்சி பிரதேசம் புவியியல் ரீதியாக வடக்கில் தொண்டைமனாறு கடல்நீரேரி, தெற்கில் யாழ்குடா கடல்நீரேரி மற்றும் பூநகரிப் பிரதேசம், மேற்கில் நாவற்குழி, செம்மணிப் பாலம், உப்பாறு கடல்நீரேரி, கிழக்கில் பச்சிலைப்பள்ளி பிரதேசம் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது. இந்த புவியல் அமைப்பும், கச்சாய், இயற்றாலை போன்ற தொன்மையான துறைமுக நகரங்களும், தென்மராட்சியின் அண்மைப் பகுதிகளான பூநகரி, அம்பனை, குடத்தனை, வல்லிபுரம், நாகர்கோவில், வெற்றிலைக்கேணி, உடுத்துறை போன்றவற்றின் அமைவு போன்றனவெல்லாம் இப்பிரதேசத்தில் தொன்மையான குடியிருப்பின் தோற்றத்திற்கும், அதன் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், பண்பாட்டுத் தொடர்புகளுக்குமான சாதகத் தன்மையினை உறுதிப்படுத்துகின்றன. 1980 களில் கலாநிதி. பொ.ரகுபதியால் யாழ்குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள கல்வளை (தாவளை இயற்றலை) - மந்துவில், சங்கிலியன்திடல் - வரணி, பங்குனிப்பிட்டி - வரணி, கச்சாய் போன்ற மையங்கள் உள்ளடங்குகின்றன. இங்கு இடம்பெற்ற ஒருசில ஆய்வுகள் ஊடாக கிடக்கப்பெற்ற புராதனகால, இடைக்கால நாணயங்கள், சுண்ணாம்புக்கல், செங்கல் கட்டிட பாகங்கள், உரோம, சீன மட்பாண்டங்கள், எண்ணிக்கையில் அதிகமான உரோமநாணயங்கள், சங்ககாலத்திற்கு சமகாலத்திற்குரியதான நடுகல் வழிபாட்டு முறைகள் என்பவையெல்லாம் இப்பிரதேசத்தின் தொன்மை வரலாற்றிற்கு மிகச்சிறந்த சான்றுகளாகும். பாளி, சிங்கள, மற்றும் யாழ்ப்பாண அரசு தொடர்பாக எழுந்த தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் வரலாற்றுச் சம்பவங்கள், வரலாற்றுக்கதைகள் என்பன தென்மராட்சிப் பிரதேசத்திற்கு உட்பட்ட பலஇடங்களுடன் தொடர்ப்புபடுத்தப்படுவதும், 12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழச்சாசனங்கள் வடஇலங்கை மீதான சோழப்படையெடுப்பின் போது வெற்றிகொள்ளப்பட்ட இடங்களில் தென்மராட்சிக்குட்பட்ட மட்டுவில் (மட்டுவால்) பிரதேசத்தினைக் குறிப்பிடப்பட்டுள்ளமையும் இப்பிரதேசத்தின் தொன்மைக்கு வலுச்சேர்க்கிறது. இந்நிலையில், தென்மராட்சிப் பிரதேசத்தில் இதுவரை முறையாகத் திட்டமிடப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்படாமலிருப்பது அதன் தொன்மை வரலாற்றை முழுமையாக வெளிகொணர முடியவில்லையெனலாம். அத்துடன் இப்பிரதேசத்திற்குரிய கலாசார மரபுரிமைச் சின்னங்கள் இன்னும் முழுமையாக ஆவணப்படுத்தி, ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருசில கலாசார மரபுரிமைச் சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் அவை பிற்கால மாறுதல்களுக்கு உட்பட்ட நிலையிலும், பல்வேறான காரணங்களால் காலத்துக்கு காலம் மாற்றங்களுக்குள்ளாகி, சிதைவடைந்து வருகின்றன. இவ்வாறானதொரு நிலையில் தென்மராட்சிப் பிரதேசத்திற்குரிய கலாசார மரபுரிமைச் சின்னங்களை முறையாக ஆவணப்படுத்தி, அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதும், அவற்றின் பாதுகாப்பில் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்மொழிதலும், அதனூடாகப் இப்பிரதேசம் அடையக்கூடிய நன்மைகளை ஆராய்வதனையும் இவ்வாய்வு நோக்கங்கங்களாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வு நோக்கங்களினை நிறைவு செய்வதன் பொருட்டு நேரடி களவாய்வின் ஊடாக முதன்நிலைத்தரவுகள் பெறப்படுவதுடன், ஏனைய இலக்கிய, தொல்லியல் சான்றுகளினையும் இரண்டாம்தர தரவுகளாகக் கொண்டு, அவற்றினை ஒப்பிட்டு ஆராய்வதனூடாக இவ்வாய்வு மேற்கொள்ளப்படும்.