பெருங்கற்காலப் பண்பாடும் பழந் தமிழ் இலக்கியங்களும் -ஓர் ஒப்பீட்டு ஆய்வு

Abstract

தமிழக வரலாறு பொதுவாக சங்ககாலத்தை மையமாக வைத்தே நோக்கப்படுகின்றது. கி.மு 3ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி 3ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதென பெரும்பாலும் காலவரையறைக்கு உட்படுத்தப்பட்ட சங்ககாலத்தில் எழுந்த எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இலக்கியங்களே சங்க இலக்கியங்களாகும். இந்திய வரலாறானது பிரித்தானியர் ஆட்சியில் மீள்வாசிப்பிற்க்கு உட்படுத்தப்பட்ட போது தமிழ்நாட்டு நாகரிக வரலாற்றை வெளிப்படுத்த உதவிய அடிப்படை மூலதாரமாகச் சங்க இலக்கியங்கள் விளங்கின. அதனால் அன்று தொட்டு தற்காலம் வரை தமிழர் நாகரிகத்தின் தொடக்க வாயிலாக சங்ககாலமும் சங்கஇலக்கியமும் பார்க்கப்பட்டு வந்தது. இவ்விலக்கியங்கள் ஏற்படுத்திய செல்வாக்கின் காரணமாகவே தமிழக வரலாறானது சங்ககாலத்திற்கு முற்பட்ட காலம், சங்ககாலம், சங்க மருவிய காலம் என சங்க இலக்கியத்தை முன்னிறுத்தியே பெரும்பாலும் நோக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் தற்காலத்தில் வளர்ச்சியடைந்துவரும் பன்முகத் தன்மை கொண்ட ஆய்வுத் துறை வளர்ச்சி காரணமாக தமிழகப் பண்பாடு பற்றி அறிந்து கொள்ள உதவும் முதன்மை ஆதாரமாக சங்க இலக்கியத்தை கொள்வது எந்தளவிற்கு பொருத்தமானதாகும் என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது. சங்க இலக்கியங்கள் தொடர்பாக தோன்றியுள்ள கருத்து முரண்பாடுகள் குறிப்பாக இவை தோற்றம் பெற்ற காலம், தொகுக்கப்பட்ட காலம், தொகுக்கப்பட்ட முறை, தொகுக்கப்பட்ட காலத்து சமூக பின்னனி என்பவற்றின் காரணமாக முழுமையான சமூகக்கட்டமைப்பொன்றினை புலப்படுத்தி நிற்கின்றது என கூறமுடியாதுள்ளது. அத்துடன் சங்க இலக்கியத்தையும் அது தோன்றுவதற்கு பின்னனியாக இருந்த பெருங்கற்காலப் பண்பாட்டினையும் ஒப்பிட்டு நோக்கும் போது பெருங்கற்கால பண்பாட்டு முதிர்ச்சி நிலை அம்சங்கள் பலவற்றையே நாம் சங்க இலக்கியங்களூடாக கண்டு கொள்ள முடிகின்றது. இவ்வகையில் இவ்வாய்வின் நோக்கங்களாக பின்வருவன அமைகின்றன. தமிழக வரலாறு சங்ககாலத்தை மையமாக வைத்தே தொடங்கப்படுகின்றது. இவ் வரலாற்றுக்கால உருவாக்கத்திற்கும் அக்கால இலக்கியங்கள் தோற்றம் பெறவும் காரணமாக இருந்த ஓர் சமுதாய அமைப்பை தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் ஆராய்வதும், இவற்றினூடாக கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலம் தொட்டு தொடர்ச்சியாக இற்றைவரை ஓர் சமுதாய தொடர்ச்சியினையும், பண்பாட்டு மாறுதல்களையும் ஆராய்வதும், சங்கஇலக்கியங்கள் தொடர்பாக தோன்றியுள்ள கருத்து முரண்பாடுகள் காரணமாக தொல்லியல் இலக்கியச் சான்றுகள் அனைத்தையும் ஒன்றினைத்து நோக்குவதன் மூலம் சங்ககால சமூகத்தின் பல்வேறு பட்ட தரவுகளை முழுமையாக ஆராய்வதும், பெருங்கற்காலப் பண்பாட்டின் இறுதிக்காலகட்டத்திலேயே சங்க இலக்கியங்கள் தோற்றம் பெற்றதெனலாம். இதனால் பழந்தமிழ் இலக்கியங்களான சங்கஇலக்கியங்களினை பெருங்கற்கால தொல்லியல் ஆய்வுகளுடன் இணைத்துகுறிப்பாக அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு பின்னனியில் ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

Description

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By