புதுக்குடியிருப்பின் ‘குடியேறிய’ வட்டாரப் பகுதிகளில் வாழும் மாற்றுத்திறனாளிகள்: ஒரு கிறிஸ்தவ மானுடவியற் பார்வை

Abstract

கிறிஸ்தவ நோக்கில் இறை சாயலில் படைக்கப்பட்ட மனிதன் சமமாண்புடையவனாகப் பார்க்கப்படுகின்றான். ஆயினும் அனைத்து மனிதர்களிற்கும் உலகில் வாழ்வதற்கான சூழ்நிலை சமமாக அமைவதில்லை. பிறப்பின்போதே சிலர் மாற்றுத்திறனாளிகளாகவும், வாழும்போதே இன்னும் சிலர் மாற்றுத்திறனாளிகளாகவும் மாற்றப்படுகின்றார்கள். மாண்புடன் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் வேறுபாடுகளின்றி சம உரிமையோடும், சகோதர அன்போடும் வாழவேண்டும் என்பதே சமூக நீதியாகும். அதனடிப்படையில் போர் தந்த வடுக்களைத் தாங்கி நிற்கும் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தின் வட்டாரப் பகுதிகளில் வாழும் மாற்றுத்திறனாளிகளின் மனிதத்துவம் சார்ந்த நிலைகளை இனங்கண்டு கொள்வதாக இவ் ஆய்வு அமைகின்றது. புதுக்குடியிருப்பின் வட்டாரப் பகுதிகளில், 2009ஆம் ஆண்டு போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இருந்து இன்றுவரை மாற்றுத்திறனாளிகள் அதிகமாகக் காணப்படுகின்றனர். இவர்கள் தம் அன்றாட வாழ்வில் உடல், உள ரீதியாக பல இடர்பாடுகளை எதிர்கொண்டு வாழ்கின்றனர். சமூகத்தில் வாழுகின்ற மாற்றுத்திறனாளிகளும் மாறுபட்ட திறன்களை தம்மகத்தே கொண்டுள்ளனர். இருப்பினும் அவர்களின் திறன்களை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுவது குறைவாக உள்ளது. எனவே கிறிஸ்தவ மானுடவியல் படிப்பினைகளின் அடிப்படையில் அவர்கள் மனித மாண்புடன் பராமரிக்கப்பட வேண்டும் என்பதைக் கூறுவது ஆய்வின் நோக்கமாகும். அதனடிப்படையில் ஆய்வுப் பிரதேசத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களை கள ஆய்வு, வினாக்கொத்து, நேர்காணல் போன்ற தரவு சேகரிப்பு முறைகள் மூலமும், நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் போன்றவை ஆய்வில் இரண்டாம் தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் மட்டுமன்றி அவர்களுக்கு உதவி செய்யும் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், பிரதேச வைத்தியர், சமயத் தலைவர்கள், பராமரிப்பாளர்கள் போன்றோருடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலில் ஆய்விற்குத் தேவையான பல்வேறு தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. இவ் ஆய்வானது ஒரு பண்பியல் ஆய்வாகவும், அளவியல் ஆய்வாகவும் அமைகின்றது. மனித வாழ்வில் ஒருவரை மாற்றத்திறனாளியாக உருவாக்குவதற்கு போர்கள், இள வயதுத் திருமணங்கள், நெருங்கிய உறவுகளிடயேயான திருமணங்கள், விபத்துக்கள், கருக்கலைப்பு நடவடிக்கைகள், கருத்தடை சாதனங்களின் பயன்பாடுகள் போன்ற பல செயற்பாடுகள் எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை என ஆய்வில் பரிந்துரைக்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளின் மாண்பு பாதுகாக்கப்பட்டு, திறமைகளை, உலகறியச் செய்ய கிறிஸ்தவ மானுடவியலின் படிப்பினைகள் துணையாக இருக்கின்றன. அதற்கு இயேசுக் கிறிஸ்துவின் படிப்பினைகளை உள்வாங்;கி, அவர்களுக்கான ஒத்துழைப்பினை நல்குவது சமூகத்திலுள்ள சக மனிதர்களினது பொறுப்பு என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்களிற்கான உதவிகள் வழங்கப்பட்டபோதிலும் பல குறை நிறைகள் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளன. ஆகவே இவர்களுடைய குறை நிறைகளையும், வாழ்வியல் சவால்களையும் இனங்கண்டு, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களும் இவ் ஆய்வில் வழங்கப்பட்டுள்ளன

Description

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By