சமூகப் பிறழ்வு நிலைகள் பற்றிய கிறிஸ்தவ அணுகுமுறை: தெரணியகலப் பங்கின் பொன்விழாவுக்கு பிற்பட்ட காலத்தினை மையப்படுத்திய ஒரு பார்வை

Abstract

படைப்பின் சிகரமான மனிதர்கள் இன்று பல்வேறு சமூகப் பிறழ்வுகளை சந்தித்து வருகின்றார்கள். இன்று குடும்பம் மற்றும் இளைஞர்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகள் சமூகத்தில் அதிகளவிலான தாக்கத்தினைள ஏற்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் இயல்பாகவே விசேட மாண்பும் உயர்ந்த தன்மையும் உரித்தாகிறது. எனவே கடவுள் வேறுபாடுகளின்றி எல்லோருக்கும் சமமான அங்கீகாரத்தை வழங்கியுள்ளார். ஆனால் மனிதர்கள் இன்று தமக்கு கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு பல்வேறு சமூக அநீதி செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். இதன் பின்னணியில் தெரணியகலப் பங்கில் வாழும் குடு?ம்பங்கள் மற்றும் இளைஞர்களிடத்தில் சமூகப் பிறழ்வுகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இத்தகைய பிரச்சனைகளுக்கான காரணம் என்ன? இதனால் இவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? இவற்றுக்கு எவ்வாறு கிறிஸ்தவ நோக்கில் தீர்வு காணலாம்? என்பது தொடர்பான விடயங்களை கண்டறிவதை நோக்கமாக் கொண்டு 'சமூகப் பிறழ்வு நிலைகள் பற்றிய கிறிஸ்தவ அணுகுமுறை' எனும் தலைப்பில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வில் சமூகப் பிறழ்வு நிலைகள் தொடர்பான விடயங்களை திருவிவிலியம் மற்றும் திரு அவையின் சமூகப் போதனைகளின் பின்னணியில் உய்த்துணர்ந்து அவதானிப்பு முறையினூடாக தெரணியகலப் பங்கில் கடந்த 2017 தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெறுகின்ற சமூகப் பிறழ்வுகளை இனங்கண்டு, இறுதியாக சான்றுவழி ஆதார முறையினூடாக தொகுத்தறியக் கூடிய வகையில் எடுத்துக் காட்டப்பட்டுள்து. இதற்கான நோக்கத்துடன் கூடிய எழுமாற்று முறையின் அடிப்படையில் ஐம்பது இளைஞர்களுக்கும் ஐம்பது குடும்பங்களுக்கும் வினாக்கொத்து கொடுக்கப்பட்டு அதன் மூலம் பெறப்பட்ட தரவுகளும், பங்குத்தந்தையுடனான நேர்காணல் வாயிலாகப் பெறப்பட்ட தரவுகளும் இங்கு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி கணவன் மனைவிக்கிடையில் நிலவும் புரிந்துணர்வின்மை, போதைப் பொருள் பாவனை, வெளிநாட்டுத் தொழில் மோகத்தின் தாக்கங்கள், பொருளாதாரச் சிக்கல், ஆன்மீகப் பின்னடைவு, தொலைத்தொடர்பு சாதனங்களின் முறையற்ற பாவனை, பெண் தலைமைத்துவ குடும்பங்களில் நிலவும் பிரச்சனைகள் போன்றவை அடையாளம் காணப்பட்டள்ளன. இவ்வாறான நிலைப்பாட்டிற்கு மக்கள் வாழுகின்ற சூழமைவும் அவர்கள் சந்திக்கின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் வீண் ஆசைகளுமே காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளன. எனவே இவற்றை திருவிவிலியத்தின் பின்னணியிலும் திருஅவையின் சமூகப் போதனைகளின் பின்னணியிலும் திறனாய்வுக்குட்படுத்தி தீர்வு காண முடியும் என இவ்வாய்வில் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் குடும்பம் மற்றும் இளைஞருக்கான வழிகாட்டலில் பங்குத்தந்தையின் பணியின் அவசியம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

Description

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By