மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் சமூக தொடர்பாடலில் வெகுஜன ஊடகங்களின் வகிபாகம் பற்றிய ஓர் திறனாய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
M.Phil. in Political Science (Political Sociology)
Abstract
அரசறிவியலும்> சமூகவியலும் சங்கமிக்கும் புதிய பாடப்பரப்பாகிய அரசியல் சமூகவியலானது கோட்பாடும்> நடைமுறையும் சங்கமிக்கும் அறிவியல்சார் ஆய்வுக்களமும் ஆகும். கோட்பாட்டின் அடிப்படையில் நடைமுறையை உய்த்துணர்வது அரசியல் சமூகவியலின் ஆதார சுருதியாகும். அவ்வகையில் வலுவான கோட்பாட்டுத் தளத்துடனும்> பின்புலத்துடனும்> அனுபவ முத்திரைகளையும் வரித்துக்கொள்ள முற்படுவதே இந்த அரசியல் சமூகவியல் ஆய்வின் இன்றியமையாத சிறப்பம்சமாகும். தொடர்பாடலும்> அதன் உந்துவிசையாகிய வெகுஜனத் தொடர்புச் சாதனங்களும் மேற்குலகில் விரிவாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளன. இலங்கையில் இது மிக அருகிக் காணப்படுவதுடன்> மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அறவே இல்லாத நிலையே காணப்படுகின்றது. இவ்வகையிலும் தனித்துவமும்> புத்தாக்க நோக்கும் கொண்ட இந்த ஆய்வு> மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் முன்னோடியான ஒன்று என்பதும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மற்றோர் சிறப்பம்சமாகும். வினா அடிப்படையிலான மூன்று கருதுகோள்களையும் (Interrogative Hypotheses), விதிதருமுறையையும் (Deductive Method) பற்றுக் கோடாகக் கொண்ட இவ்விவரண ஆய்வு (Descriptive Study)> மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் சமூகத் தொடர்பாடலில் வெகுஜன தொடர்புச் சாதனங்களின் வகிபாகம் தொடர்பான பிரச்சினைகளையும்> சவால்களையும் பகுத்தாராய்ந்து பரிகாரங்களை முன்வைக்கின்றது. இம்முயற்சியை மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளும்> அனுகூலமற்ற காரணிகளும் மட்டுப்படுத்துவதையோ> கட்டுப்படுத்துவதையோ> மழுங்கடிப்பதையோ துணிவுடனும்> சமயோசிதத்துடனும் தாக்குப்பிடிக்க முற்படுவதை இவ்வாய்வினுள் பிரவேசிப்போர் பிரத்தியட்சமாக காணமுடியும். ஆய்வின் முதல் அத்தியாயம் அறிமுகமாக ஆரம்பமாகின்றது. ஒப்பீட்டளவில் இரண்டாம் அத்தியாயம் விரிவான ஒன்றாகவும்> மூன்றாம்> நான்காம் அத்தியாயங்களின் உள்ளடக்கங்களை விளங்கவும்> விமர்சிக்கவும், மதிப்பிடவும் வாய்ப்பான அடிப்படைகளை இட்டு வைக்கும் ஒன்றாகவும் அமைகின்றது. அரசியல் சமூகத் தொடர்பாடல் பற்றிய கோட்பாடுகளின் அனுகூலங்கள், பிரதியனுகூலங்கள் என்பவற்றுடன், வெகுஜனத் தொடர்புச் சாதனங்களின் கோட்பாட்டு வளர்ச்சி, தாக்கம் என்பவற்றையும் இணைத்தும், பிரித்தும் பரிசீலிக்கும் இந்த அத்தியாயம் இருள்கவிந்த மட்டக்களப்பின் ஆய்வுப்பரப்பிற்கு ஒளிக்கீற்றுக்களை வழங்குகின்றது. மூன்றாம், நான்காம் அத்தியாயங்கள் மட்டக்களப்பின் களநிலவரங்களுக்குள் ஊடுருவி, பிரச்சினையின் மையங்களையும், செல்நெறிகளையும் துல்லியமாக இனம் கண்டு விளக்கும் அதேவேளையில், ஒப்பீட்டளவில் குறுகியவையாக அமைவதற்கு ஆய்வாளரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பாதகமான புறநிலைமைகளே காரணங்களாகும் என்ற உண்மையைத் தெரியப்படுத்தியாக வேண்டும். நீண்ட கள ஆய்வின் மூலம் பெறப்பட்ட பல தரவுகளையும், அனுபவங்களையும் தவிர்க்கவோ, சுருக்கவோ, தீவிரம் குறைக்கவோ, மறைபொருளில் கூறவோ வேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்டது. கள ஆய்வில் சந்தித்த பல பொதுமக்களும், சில முக்கிய பிரமுகர்களும் தம்மையும் தமது கருத்துக்களையும் ஆய்வில் இருட்டடிப்புச் செய்யுமாறு வேண்டிக் கொள்ளத் தவறவில்லை. சிலர் சுயதணிக்கையிலும் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது. இருப்பினும், மட்டக்களப்பின் அரசியல் யதார்த்தங்களுக்கும், புலமைசார் ஆய்வுக்குமிடையில் தொடர்ந்து நிலவி வரும் பெரும் இடைவெளியை போராடிக் குறைப்பதில் ஆய்வு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது என்றால் அது மிமையாகாது. ஐந்தாவதும், இறுதியுமான அத்தியாயம் முடிவுரையும் முன்மொழிவுகளுமாக அமைகின்றது. இவ்வத்தியாயமும் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு விதிவிலக்காக இருக்கவில்லை. ஆய்வின் முடிவுகளையும், முன்மொழிவுகளையும் அறுதியாகவும், உறுதியாகவும் முன்வைப்பதற்காக பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களும், கலந்துரையாடல்களும், சர்ச்சைகளும், மறுவாதங்களும் மட்டுமன்றி, ஒத்துழையாமை, சந்தேகப்பார்வை போன்றவையும் மலிந்தவையாகக் காணப்பட்டன. இத்தகைய எதிர்மறையான காரணிகளால் ஆய்வின் நேர்த்தியும், தரமும் பாதிப்புறாமல் தவிர்ப்பதற்காகப் பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது. எதிரிடையான புறநிலைமைகளை எதிர்கொண்டு, பெருமளவுக்கு உணர்வுபூர்வமாகிவிட்ட ஒரு சிக்கலான பிரச்சினையை அறிவியல் கண்ணோட்டத்தில் அணுகி, புலமைசார் நேர்மை கொண்ட ஆய்வொன்றைப் பூர்த்தி செய்த நம்பிக்கையும், திருப்தியும் ஆய்வாளருக்குண்டு. இவ்வாய்வின் பின்னூட்டங்களும், பயன்பாடுகளும் காலத்தால் நிரூபிக்கப்படும்.