மட்டக்களப்புத் தேசத்து வைஷ்ணவ சம்பிரதாயங்களும், சித்தாந்தங்களும் – கஞ்சன் அம்மானையினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
இந்து எனும் சட்டகத்தினுள் வைதின சமயங்கள் அனைத்தும் இணைவு பெற்று விளங்குவது மட்டக்களப்பு தேசத்து சமய மரபின் சிறப்பம்சமாகும். அம்மன், சிவன், முருகன், விஷ்ணு, குமாரர் என ஒவ்வோர் வழிபாடும் ஒவ்வொரு பண்பாட்டுத் தளத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளது. இத்தேச வைஷ்ணவ மரபில் விஷ்ணு, திரௌபதை ஆலயங்கள் எண்ணிக்கையில் குறைவெனினும் அவ்வாலயச் சடங்குகள் தனித்துவமும் சிறப்பும் வாய்ந்தவை. புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை மட்டக்களப்புக் கலாசாரம் மகாபாரதக் கலாசாரம் என கூறுவதற்கமைய இத்தேசத்துக் கலை, இலக்கியங்கள் மகாபாரத கலாசாரப் பண்புகளைக் கொண்டவையாகத் திகழக்காணலாம். இங்குள்ள வைஷ்ணவ இலக்கியங்களின் வரிசையில் அம்மானைகள் தனித்துவம் பெறுகின்றன. அந்தவைகையில் பாரத அம்மானை, கஞ்சன் அம்மானை, வைகுந்த அம்மானை, இராமர் அம்மானை என்பன கவனத்திற்குரியன. பகவானின் பூர்ணாவதாரங்களில் ஒன்றாக அமைவது ஸ்ரீகிருஷ்ண அவதாரமாகும். கண்ணனாகப் பிறந்து வளர்ந்து கஞ்சனை வதம் செய்வதைப் பற்றி எடுத்துரைப்பதே ”கஞ்சன் அம்மானை” ஆகும். கஞ்சன் வத்த்தினை பாடுபொருளாகக் கொண்ட இவ்வம்மானை மட்டக்களப்பு தேசத்து விஷ்ணு ஆலயங்களில் பூசிக்கப்படும் புனிதச் சின்னமாகவும், பூசைகளை நெறிப்படுத்தும் பனுவலாகவும் திகழ்கின்றது. இவ்வம்மானை சமய இலக்கியமாக மாத்திரமின்றி பொதுமக்கள் இலக்கியமாகவும் திகழும் சிறப்பிற்குரியது. மட்டக்களப்பு தேசத்தின் வைஷ்ணவ சமய மரபின் முக்கிய பனுவலாகத் திகழும் இவ்வம்மானையினை மையப்படுத்திக் கட்டமைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு தேசத்தின் வைஷ்ணவ சம்பிரதாயங்களையும், அம்மானையில் இழையோடுகின்ற வைஷ்ணவ சித்தாந்தங்களையும் வெளிக்கொணர்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும். சமய மரபிலும் தத்துவ மரபிலும் பன்மைத் தன்மையைக் கொண்டு துலங்குகின்ற இத்தேசத்து மரபில் வைஷ்ணவ சித்தாந்தத்தை அடையாளப்படுத்த முனைகின்ற இவ்வாய்வில் விபரண ஆய்வு முறையியலே அதிகம் கையாளப்படுகின்றது. அவசியமான இடங்களில் வரலாற்றியல் மற்றும் ஒப்பாய்வு முறையியல்களும் கையாளப்படுகின்றன. கஞ்சன் அம்மானையில் பேசப்படும் வைஷ்ணவ சித்தாந்தச் சார்புடைய ஈஸ்வரனின் பரத்துவம், வைணவ மரபில் ஈஸ்வரனுக்குக் குறிப்பிடப்படும் ஐந்து நிலைகளான பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்பன பற்றிய செய்திகள், வாசுதேவனின் வியூகங்கள் பற்றிய செய்திகள், ஈஸ்வரனின் மங்கல கல்யாண குணங்கள், சரீரசரீரி சம்பந்தம், பரிணாமவாதம், வினைகளிலிருந்து மீள்வதற்கான வழிகள், பொன்னுலகு எனப்படும் முக்திநிலை ஆகிய விடயங்கள் தொடர்பில் இக்கட்டுரை கருத்துக்களை முன்வைத்துள்ளது.