குறைவான அடிப்படை இசைக்கல்வி அறிவுடன் பல்கலைக்கழகத்துள் நுழையும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அதற்குரிய காரணிகளும்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Jaffna Science Association
Abstract
ஒரு மனிதனுடைய இரசனை நல்வழியில் மட்டுமன்றி தீயவழியில் செல்வதற்கும் சாத்தியங்கள் உள்ளன. அவனுடைய இரசனை உணர்வை நல்ல ஆன்மீகக் கலைகள் மூலமாகவும், நல்ல கலாசார விழுமியங்கள் மூலமாகவும் வெளிக்கொணர வேண்டியது அவசியமாகின்றது. குழந்தை பிறக்கும்போதே சில இயைபாக்கங்களுடன் பிறக்கிறது. அழகியல் கல்வியின் தன்மைகளை ஒரு குழந்தையின் சிறுவயதிலிருந்தே ஊட்டி வளர்ப்பது மிகுந்த வெற்றியைத்தரும் என்பதும், இசை போன்ற நுண்கலைகள் உளவியல்ரீதியாக மனித உள்ளத்தைச் சமநிலைப்படுத்தும் என்பதும் அநுபவரீதியாக உணரப்பட்டதன் காரணமாக இலங்கை உட்பட பல நாடுகள் பாடசாலைக் கலைத்திட்டத்தில் அழகியற் கல்வியை உள்ளடக்கியுள்ளன. மாணவர்கள் மிக இலகுவான இராகங்களில் குரல்பயிற்சி செய்யவும், வர்ணங்கள் கற்கவும், கற்பனா ஸ்வரங்கள் பாடவும் சிரமப்படுதல் என்பது இத்தலைப்பிற்குரிய ஆய்வுச் சிக்கலாக முன்வைக்கப்படுகிறது. கல்விப் பொதுத் தராதர உயர்தரத் தேர்வினை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி இசைக்கல்வியில் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களுடைய செயன்முறை அடைவுமட்டங்கள் வேறுபட்டுக் காணப்படுகின்றது. இவர்கள் தம் கல்வியைத் தொடரும் காலங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், அதற்குரிய காரணிகளையும் கண்டறிவதே இவ் ஆய்வின் நோக்கமாகும். இலங்கையில் பல பாகங்களிலிருந்தும் தெரிவாகித் தமது இசைக்கல்வியைப் பயின்று கொண்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள், இசை ஆசிரியர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள். சங்கீத உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ஒரு தொகுதி பெற்றோர்கள் ஆகியோருடனான நேர்காணல்கள் ஊடாகவும், வினாக்கொத்து மூலமாகவும் ஆய்விற்குத் தேவையான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. கள ஆய்வினை
கள ஆய்வினை உள்ளடக்கிய அளவைநிலை ஆய்வு மூலம் இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. நேர்காணல். வினாக்கொத்து. நேரடித்தரிசனம், ஆவணங்களின் பரிசீலனை. ஒரு தொகுதி பெற்றோர்களுடனான சந்திப்பு ஆகியன இவ் ஆய்வுக்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன மாணவர்கள் தமது பாடசாலைக்கல்வியைத் தொடர்ந்த காலத்தில் இசைக்கல்வியைக் கற்பதில் பல பிரச்சினைகளை எதிர் கொண்டீருப்பர். கற்றல். கற்பித்தல் திறன்களை இற்றைப்படுத்தலில் பிரச்சினை உள்ள ஆசிரியர்கள் கற்பித்தமை, இசை ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியமை. அதாவது சில வகுப்புக்களில் கற்கும்போது இசை ஆசிரியர் இன்மை. பாடத்திட்டங்கள் உரிய காலங்களில் ஆசிரியரால் நிறைவு செய்யப்படாமை. அடிப்படை வசதிகள் இல்லாததன் காரணமாக பின்தங்கிய சில பாடசாலைகளில் இசை ஆசிரியர்கள் இல்லாமை. இதனால் தொடரான கல்வி தடைப்படுகின்றமை, இசைக்கல்விக்குரிய வகுப்பறை இன்மை, கற்றல் சாதனங்கள் இல்லாமை, குடும்ப வறுமை காரணமாக பிரத்தியேக இசைக்கல்வி தடைப்படுகின்றமை, தமது இசை ஆசிரியர்களுக்கு ஏற்படும் இட மாற்றங்கள், இசைக்கல்வி சம்பந்தமான விழிப்புணர்வு பெற்றோரிடத்தில் இல்லாமை போன்ற காரணிகள் அவர்களுடைய உயர்கல்வியின் அடைவு மட்டத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இவ்வாறான பிரச்சினைகளுக்குரிய காரணிகளைக் கண்டறிவதும், எண்ணற்ற சவால்களை எதிர்கொள்ளும் இசை பயிலும் மாணவர்களை வினைத்திறன் மிக்க மாணவர்களாக உருவாக்குவதற்குரிய ஆலோசனைகளை முன்வைப்பதும் இவ் ஆய்வின் பயனாகும்.