போருக்குப் பின்னரான பணப் பயிர்ச்செய்கை யாழ்ப்பாண மாவட்டத்தை சிறப்பாகக் கொண்ட ஆய்வு

Abstract

இலங்கையின் பொருளாதாரத்தில் விவசாயமே முக்கிய துறையாக விளங்குகின்றது. இங்கு விவசாய நடவடிக்கைகள் நுகர்விற்காக மட்டுமன்றி வர்த்தகத்திற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான ஒரு நிலைமை தான் இலங்கையின் வடக்கே அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்டத்திலும் நீண்டகாலமாக காணப்பட்டு வருகின்றது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டம் அதிக வருமானத்தை ஏற்றுமதி செய்யும் பணப்பயிர்களாலேயே பெற்றுக்கொள்கின்றது. அதாவது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து பணத்தை இலாபமாகப் பெறுகின்ற பயிர்களே பணப்பயிர்கள் எனப்படுகின்றன. இப்பணப்பயிர்களில் வெங்காயம், புகையிலை, மிளகாய், உருளைக்கிழங்கு, திராட்சை, வாழை ஆகியன இங்கு முக்கிய இடத்தினை வகிக்கின்றன. இதனை விட குறிப்பிட்ட சில சிறுதானியங்களும் (உ+ம் எள்ளு) சில மரக்கறி வகைகளும் (கரட், பீற்றூட், தக்காளி, போஞ்சி) மிகக் குறைந்த அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வகையில் இவ் ஆய்வானது போருக்குப் பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்தில் பணப்பயிர்செய்கையின் நிலையினை அறிதலாகவே உள்ளது. இலங்கையின் பணப்பயிர்ச் செய்கையில் யாழ்ப்பாண மாவட்டம் முக்கியம் பெற்று விளங்குவதால் அதன் தற்போதைய நிலையை அறிதலும், இப்பயிர்ச்செய்கை எதிர்நோக்கும் பிரச்சனைகளை கண்டறிதலும், அவற்றிற்கான தீர்வுகளை முன்வைத்தலும் இவ் ஆய்வின் நோக்கங்களாக உள்ளன. ஆய்வுப் பிரதேசத்திலுள்ள பதினைந்து பிரதேச செயலர் பிரிவுகளில் 4916 குடும்பங்கள் பணப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் எழுமாற்றாக தெரிவு செய்யப்பட்ட 400 குடும்பங்களுக்கு வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. அத்துடன் நேரடி அவதானம், பேட்டிகாணல், கலந்துரையாடல் போன்ற முறைகள் மூலமும், தரவுகள் சேகரிக்கப்பட்டன. இவ் ஆய்விற்காக இரண்டாம் நிலைத் தரவுகளும் சேகரிக்கப்பட்டு பெறப்பட்ட தரவுகளானது கணினி மூலம் குறிப்பாக Excel Package மூலமும், புவியியல் அளவைசார் நுட்பமுறை மூலமும் (Quantitative Technique in Geography), எளிய புள்ளிவிபர முறை மூலமும் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ் ஆய்வில் பெறப்பட்ட தரவுகளின் அவதானிப்புக்கள், பகுப்பாய்வுகள் மூலம் பெறப்பட்ட முடிவுகளின் படி பணப்பயிர்கள் விளைவிக்கப்படும். நிலங்களில் பெருமளவான பரப்புக்கள் உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே காணப்படுகின்றன. குறுகிய பரப்பில் அதிக விளைச்சலை பெறும் நோக்குடன் அதிகளவான இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் நிலம் தரமிழந்து வளமிழந்து போய்விடுகின்றது. அத்துடன் கிணற்று நீர் உவராகும் தன்மை, இடைத்தரகர்களின் தொல்லை, போதிய சந்தை வாயிப்பின்மை, விவசாயிகளின் பாரம்பரிய முறைகளை கைக்கொள்ளல் போன்ற பிரச்சனைகளும் ஆய்வுப் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப் பயிர்ச்செய்கை எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வாக உயர்பாதுகாப்பு வலய விவசாய நிலங்களை விவசாயிகளுக்கு மீட்டுக் கொடுக்க வேண்டும். நிலம், நீர் போன்றவை தரமிழத்தல் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் சந்தைப்படுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட முகவர்களை உருவாக்குதல், அரசாங்கம் பணப்பயிர்களுக்கு உத்தரவாத விலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தல், விவசாயிகளுக்கு பயிர்க்காப்புறுதி திட்டங்களை அறிமுகம் செய்தல் போன்ற தீர்வுகளால் யாழ்ப்பாண மாவட்ட பணப்பயிர்களின் உற்பத்தி, விளைச்சல், சந்தைப்படுத்தல், வருமானம் பெறல் என்பவற்றை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லலாம்.

Description

Keywords

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By