பாரதியின் கவிதைகளில் அத்வைத வேதாந்தக் கருத்தியல்கள்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Eastern University, Sri Lanka
Abstract
தேசவிடுதலையைத் தனது கவிதைகளில் மையப்பொருளாக்கிய முண்டாசுக் கவிஞன் பாரதி அதனுடன் இணைந்த நிலையில் சமுதாயவிடுதலை மற்றும் ஆன்மீக விடுதலைக்கான பிரக்ஞையினையும் வெளிப்படுத்தியிருந்தான். இந்தியப் பண்பாட்டு மரபில் இனங்காணப்பட்ட சில தொன்மங்களும் கருத்தியல்களும் பாரதியின் கவனத்தையீர்த்தன. தனது கவிதைப் போராட்டத்துக்குத் துணை செய்யும் வகையில் அவற்றில் பொதிந்திருந்த சில இழைகளே பாரதிக்கு அவற்றில் நாட்டம் ஏற்பட ஏதுவாயிற்று. அத்வைதவேதாந்தம் இவ்வாறாகப் பாரதியின் கவனத்தையீர்த்த தத்துவமாகத் திகழ்கிறது. இதற்கான நியாயப்பாடுகளைத் தேடி இக்கட்டுரை பயணிக்கிறது. உபநிடதங்கள் பிரம்மசூத்திரம் மாண்டூக்யகாரிகை ஆகியவற்றின் வழியில் ஆதிசங்கரரால் கி.பி 8ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஒருமைவாதமாக அத்வைத வேதாந்தம் திகழ்கிறது. விசயநகரப்பேரரசின் ஆட்சிக்காலத்தில் விவரணச்சிந்தனைப் பள்ளியின் வருகையோடு இவ்வேதாந்தம் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெறத்தொடங்குகிறது. அத்வைதம் தனது கோட்பாட்டின் ஊடுபாவாகப் பரிபூரணவாதத்தை முன்னிறுத்தியது. அதாவது பிரபஞ்சத்தில் காணப்படும் அசமத்துவமும் வேறுபாடுகளும் அறியாமையால்(அவித்யா காரண) விளைந்தவை. அடிப்படையில் பிரம்மமாகிய பரிபூரண சுத்தசைதன்யமே(அறிவு) உண்மையானது. ஒவ்வோர் ஆன்மாவும் உண்மையில் பிரம்மமே. ஆனால் அவித்தையாகிய மாயையின் காரணத்தால் மெய்ம்மையுணராமல் வேறுபாடுகள் விளைகின்றன. இதனையே அத்வைதத்தின் அடிப்படையெனலாம். சாதி, மத,வர்க்க வேறுபாடுகளால் சிதறுண்டு போயிருந்த இந்தியர்களை அவ்வேறுபாடுகளைக் கடந்து ஒன்று திரட்ட வல்லதோர் அறிவாயுதமாகப் பாரதிக்கு அத்வைதம் தென்பட்டிருக்கலாம். ஞானப்பாடல்கள், சர்வமத சமரசம், அழகு தெய்வம், காலனைப் பழித்தல் முதலிய தலைப்புக்களில் இடம்பெறும் பாரதியின் கவிதைகளில் அத்வைதப் பரிமாணம் மிக வெளிப்படையாகத் துலங்குகிறது. இவை தவிரவும் அத்வைதவேதாந்தக் குறியீடாகவே குயிற்பாட்டினை நோக்குவர். அந்நிய ஆதிக்கத்தை "மாயை" என்கிற குறியீட்டினால் உருவகித்துக் கொண்டு அந்த மயக்கத்திலிருந்து பாரத சமுதாயத்தினை மீள்விப்பதற்கான அறைகூவலை விடுப்பதற்கு வாய்ப்பான தத்துவார்த்தக் கருவியாகவும் அத்வைதம் பாரதிக்குப் பயன்பட்டது.மேலும் அத்வைதமானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினால் தொடர்ந்து தேடப்பட்டு வந்த பாரதிக்கு மரண பயத்தை வெல்லவும் ஆத்ம பலத்தை வழங்கவும் வல்ல தத்துவமாகவும் விளங்கியது. ஏனெனில் தன்னை உணர்ந்தபின் தானும் பிரம்மமும் வேறல்ல. மரணமும், பிறப்பும், மகிழ்வும் துன்பமும் நிறைந்த உலகம் வெறும் காட்சிப்பிரமை.தன்னை உணர்ந்தால் தானே பிரமம், என வலியுறுத்திய அத்வைதம் ஆத்ம பலத்தைப் பாரதிக்கு வழங்கியது என ஊகிப்பதில் தவறில்லை