நீக்கிலாப்பிள்ளை மரியசேவியரின் மறைபொருள் நாடகங்களின் இலக்கியச் சிறப்பு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Jaffna Science Association
Abstract
திரு அவை வரலாற்றில் மத்திய காலப்பகுதியில் இடம்பெற்ற சடங்குகளே கிறிஸ்தவ நாடகங்களின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வித்திட்டுள்ளன. முதலில் உயிர்ப்பு நாடகங்களும் தொடர்ந்து பாடுகளின் நாடகங்களும் தோற்றமும் வளர்ச்சியும் கண்டுள்ளன. பிற்பட்ட காலங்களில் மறைபொருள் நாடகங்கள், புனிதர்களின் வரலாற்று நாடகங்கள், ஒழுக்கப் பண்பு நாடகங்கள் என மேலும் வளர்ச்சி பெற்றுள்ளன. 1543இல் பிரான்சிஸ்கன் சபையினர் இலங்கைக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து உத்தியோகப்பூர்வமாகக் கத்தோலிக்க மறையைப் பரப்புவதற்கு அனுமதி வழங்கப்;பட்டது. 1602இல் வருகைதந்த இயேசு சபை குருக்கள் நாடகத் துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். இவர்கள் விவிலியம், ஒழுக்கக் கோட்பாட்டு என்பவற்றை மையப்படுத்திய நாடகங்களை ஆற்றுகை செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் திருப்பாடுகளின் காட்சி 1952இல் அருட்திரு லோங் அடிகளாரால்; ஆங்கிலத்தில் மேடையேற்றப்பட்டுள்ளது. ஆயினும் 1960களில் இருந்துத் தமிழ் மொழிக்குரிய தனித்துவமான எழுத்தாக்கத்தில் மரியசேவியர் அடிகளார் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு திருப்பாடுகளின் காட்சிகளை மேடையேற்றியுள்ளார். இலங்கை வானொலி கிறிஸ்தவ சேவையில் பணியாற்றிய இவர் மறைபொருள் நாடகங்கள் சிலவற்றைக் கத்தோலிக்க வானொலி சேவையில் ஒலிபரப்புவதில் ஆர்வமாய் ஈடுபட்டுள்ளார். கையெழுத்துப் பிரதியாக ஆவணப்படுத்தப்பட்ட நாடகங்கள் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளின் பின்னர் 'மறை பொருள் நாடகங்கள்: தொகுதி - 01' என்னும் தலைப்பில் 2019 ஆண்டு யாழ்ப்பாண திருமறைக் கலாமன்றத்தினால் நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு நீண்டதொரு வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட இந்நாடக பிரதிகளை ஆய்வு செய்து, அவற்றின் இலக்கிய சிறப்புக்களை வெளிக்கொணர்வதாக இந்த ஆய்வு அமைந்துள்ளது. மரியசேவியர் அடிகளின் கலை, இலக்கிய பங்களிப்பு என்பது பன்முக நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விடயமாகும். ஆய்வானது அவரின் நாடகத்துறை பங்களிப்புக்களில் ஒரு பகுதியான மறைபொருள் நாடகங்களில், நூலாக வெளியிடப்பட்ட பத்து பிரதிகளை மட்டுமே மையப்படுத்தியுள்ளது. அவ்வாறு வெளிவந்த நாடகங்களின் இலக்கிய சிறப்புக்கள் எடுத்துரைக்கப்படாமை என்னும் விடயம் இந்த ஆய்வினை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது. மரியசேவியர் அடிகளாரின் மறைபொருள் நாடக பிரதியின் உள்ளக்கங்களை வெளிப்படுத்தல், விவிலிய அறிவில் ஆசிரியரிடம் காணப்பட்ட ஆளுமை போன்றவற்றை கண்டறியும் இலக்குகள் வழியாக மறைபொருள் நாடகங்களின் இலக்கிய சிறப்புக்களை எடுத்துரைப்பது ஆய்வின் நோக்கமாகும். ஆய்விற்கான தரவுகளைப் பெறுவதற்கு மரியசேவியர் அடிகளாரின் மேற்கூறிய நூல் பகுப்பாய்வு செய்யப்பட்டு, திருவிவிலியத்த்தில் யூத கலாசாரப் பின்னணியில் எழுந்த வரலாறு, மறைசார் உண்மைகளைத் தமிழ் பேசும் மக்கள் இலகுவில் விளங்கிப் பயனடையும் வகையில் ஆசிரியர் எவ்வாறான இலக்கிய உத்திகளைக் கையாண்டுள்ளார் என்பதை வெளிக்கொணர்வதற்கு வரலாற்று ஆதார முறையுடன் உய்த்துணர் முறையியலும் கையாளப்பட்டுள்ளன. ஆய்வினூடாக நாடகங்களில் கையாண்டுள்ள இலக்கிய சிறப்புக்கள் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளன. யூதப் பின்னணியில் தோன்றிய மிகப்பெரிய வரலாற்றுச் சம்பவத்தை, சாதாரண சமூகமும் இலகுவில் விளங்கிக்கொள்ளக்கூடிய எளிய நடையில், இரசனையோடு எடுத்துரைத்துள்ள முறை அவரின் இலக்கிய நடையின் சிறப்புக்கு மேலும் ஆதாரமாயுள்ளது. மரியசேவியர் அடிகளின் மறைபொருள் நாடக பிரதிகளை ஆழமாக உற்றுநோக்கிய ஆய்வு என்னும் வகையில் இந்த ஆய்வானது தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியப் பரப்பிற்கும் கிறிஸ்தவ இறையியலுக்கும் வலுவூட்டும் ஆவணப்படுத்தலாகும்.