உள்நாட்டுப்போரின் பின்னரான காலப்பகுதியில் பெண்கள் மற்றும் சிறுவர்களது நலன்களில் சாவகச்சேரிப் பிரதேச செயலகம்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts University of Jaffna, Sri Lanka
Abstract
மக்களின் தேவைகளை அரசாங்கத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் அரசின் திட்டங்களை மக்களிடையே நடைமுறைப்படுத்துவதற்கும் பொதுத்துறை நிர்வாகமானது இலங்கையில் அதன் பங்களிப்பினை காலத்திற்குக் காலம் நல்கி வந்துள்ளது. அவ்வகையில், ஆங்கிலேயரது காலத்திலிருந்து ஆரம்பித்த நவீன நிர்வாகமுறையின் தொடர்ச்சியான வளர்ச்சித்தன்மையினை தற்காலம்வரை இலங்கையில் அவதானிக்க முடிகின்றது. இத்தகைய வளர்ச்சிகளில் ஒன்றாகவே பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்ற பிரதேச செயலகங்களைக் குறிப்பிடலாம். பிரதேச நிர்வாகமானது மணியக்காரர் முறையில் ஆரம்பித்து இன்று பிரதேச செயலகம் என்ற அமைப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. மாகாண, மாவட்ட மட்டங்களில் பணிகளினை மேற்கொள்கின்றபோது ஏற்படுகின்ற அசௌகரியங்களை நீக்குவதற்காக 1992ஆம் ஆண்டில் பிரதேச செயலகங்களை நோக்கி அதிகாரம் பரவலாக்கப்பட்டது. இதன் பின்னர் அவ்வப்பகுதிகளில் மக்களுக்குத் தேவையான பல்வேறு சேவைகள் வழங்கி வரப்பட்டுள்ளன. இவற்றில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான சேவைகளும் குறிப்பிடத்தக்கன. இலங்கையில் வடபகுதியில் காணப்படுகின்ற சாவகச்சேரிப் பிரதேச செயலகமானது பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாகப் பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை உள்நாட்டுப் போரின் பின்னராக மேற்கொண்டு வருகின்றது. அதாவது, பெண்களுக்கான சுயத்தொழில் வாய்ப்பு, உளநல ஆலோசனை, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான உதவி, சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்குதல், பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களுக்கான வழிகாட்டல், அரசசார்ப்பற்ற நிறுவனங்களின் உதவிகளைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற பல்வேறு சேவைகளை வழங்கியுள்ளது. அவ்வகையே பயனாளிகளுக்கிடையே பிரதேச செயலகப் பணிகள் தொடர்பான திருப்தியின்மை காணப்படுவதுடன் பிரதேச செயலக வளப்பங்கீடானது சரியான முறையில் பேணப்படவில்லை என்பன கருதுகோள்களாகக் காணப்படுகின்றன. இவ்வாய்வானது சாவகச்சேரிப் பிரதேச செயலகத்தின் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அதனை மேற்கொள்கின்றபோது ஏற்பட்ட பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை முன்வைத்தல் என்பதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகக் காணப்படுகின்றது. இவ்வாய்விற்கான தரவுகள், களவாய்வு, நேர்காணல்கள், கலந்துரையாடல்கள், நூல்கள், வினாக்கொத்துப்படிவம் போன்றவற்றின் மூலம் சேகரிக்கப்பட்டு வரலாற்று அணுகுமுறையிலமைந்த விவரண ஆய்வாக மேற்கொள்ளப்படுகின்றது. வளப்பங்கீட்டினை உரியமுறையில் பேணுவதுடன் பெண்கள் மற்றும் சிறுவர்களது குறைகளினைக் கேட்டறிந்து அவர்களினுடைய தேவைகளை நிறைவேற்றுவதனூடாக சாவகச்சேரிப் பிரதேச செயலகமானது மேலும் உன்னதமான நிலையினை அடையமுடியும் என்பது இவ்வாய்வின் முடிவாகும்.