இலங்கை வடபுலத்தில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பணியில் தமிழ் ஊடகத்துறையின் பங்கு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of jaffna
Abstract
தொடர்பாடலும் தகவல் தொழில்நுட்பமும் என்றுமில்லாதவாறு இன்று மனித
வாழ்வியலைவிட்டுப் பிரிக்க முடியாதளவிற்கு மனிதனின் அடிப்படைத் தேவைகளில்
ஒன்றாக மாறி எல்லாத் தளங்களிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றன.
அத்துடன் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட
ஊடகத்துறை ஒரு சமூகத்தின் கூட்டான சிந்தனைப்போக்கை மாற்றி அச்சமூகத்தின்
எதிர்கால செல்நெறியை தீர்மானிக்கும் வல்லமை படைத்ததாக மாறியுள்ள
அதேவேளையில் மறைமுகமாக சமூகங்களுக்கிடையே சாதி மதரீதியான
முரண்பாடுகளை தோற்றுவித்து அதனை வலுப்படுத்தி பிரிவினைகளுக்கும்
பிரச்சினைகளுக்கும் அடித்தளமிடும் செயற்பாடுகளையும் சாணக்கியமாக
ஆற்றிவருகின்றது. குறிப்பாக இலங்கை போன்ற பல்சமய மக்கள் வாழும் நாடுகளில்
இதனுடைய தாக்கம் இலகுவில் உணரக்கூடியதாகவும் வெளிப்படக்கூடியதாகவும்
அமைந்துள்ளது. இலங்கையின் வடபுலத்தில் முப்பது வருடத்திற்கு மேலாக
நடைபெற்றுவந்த இனவிடுதலைப்போர் சர்வதேசத்தின் பலத்தோடு ஒடுக்கப்பட்டதன்பின்
தமிழ் மக்கள் தலைமைத்துவ வெற்றிடத்திற்குள் நின்றுகொண்டு அதனை
ஈடுசெய்யமுடியாமல் தமது இருப்பிற்காக தொடர்ந்தும் அகிம்சைவழியில்
போராடிவருகின்றார்கள். இப்போராட்டத்தில் எதிர்கொள்ளும் சவால்களை மேற்கொண்டு
தமது இருப்பையும் சுயநிர்ணய உரிமையையும் வென்றெடுக்க சாதி மத
பிரிவினைகளை கடந்து மக்கள் ஒற்றுமையாக இருப்பதும் செயற்படுவதும் காலத்தின்
தேவையென பலரும் சுட்டிக்காட்டிவருகின்றனர். எனவே இப்பின்ணணியில் மக்களின்
எதிர்கால வாழ்வை தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றான ஊடகங்கள் மக்கள்
மத்தியில் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தி தேசியம் எனும் பரந்தவெளிக்குள்
மக்களை ஒன்றுபடுத்த முனையவேண்டும். இருப்பினும் மக்களின் ஒற்றுமையை
மேலும் குலைக்கும் நோக்கில் தீய சக்திகளின் ஊடுருவல்களால் ஆங்காங்கே வெளிப்படும் சாதி மத முரண்பாடுகளை பெரிதுபடுத்தி குழப்பங்களை
அதிகரிக்கச்செய்யும் செயற்பாடுகளுக்கு ஊடகங்கள் துணைபோவதும் மிகவும்
கவலைக்குரிய விடயமாக அமைந்துள்ளது. அத்துடன் ஒரு மதத்தை இழிவுபடுத்தி
அது சார்ந்த செயற்பாடுகளை கொச்சைப்படுத்துவது, உண்மைக்கு புறம்பான
செய்திகளை வெளியிட்டு பக்கசார்பாக செயற்படுவது, சிறிய விடயங்களுக்கு
அதிகமான முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவது மற்றும் தென்னிந்திய
திரைப்படங்களில் மத விழுமியங்களை கொச்சைப்படுத்தும் அல்லது அம்மதம்
தொடர்பான பிழையான புரிதலை மக்கள் மத்தியில் உருவாக்கும் காட்சிகளை
அமைப்பது போன்றவையும் மத முரண்பாடுகளுக்கான புறச்சூழலை மக்கள் மத்தியில்
தோற்றுவிக்கும் காரணிகளாக அண்மைக் காலங்களில் இனம்காணப்பட்டுள்ளன.
அச்சு ஊடகங்கள், சமூகவலைத்தள ஊடகங்கள், அண்மையில் வெளிவந்து
கொண்டிருக்கும் தென்னிந்திய சினிமா திரைப்படங்கள் போன்றவற்றில் வெளிவரும்
செய்திகள், தகவல்கள், காட்சிப்படுத்தல்கள் போன்றவற்றை பகுப்பாய்வுசெய்து
சமகால நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது இவ் உண்மை புலனாகின்றது.
எனவே இப்படியான சூழலில் மக்களின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்காத
முறையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மக்களை வழிநடத்தி செல்ல வேண்டிய
உன்னதமான பணியை ஊடகங்கள் முன்னெடுத்து செல்வது காலத்தின் கட்டாயமகும்.
ஊடகங்களை முகாமைத்துவம் செய்பவர்கள் தங்களின் சுயவிருப்பு வெறுப்புக்களை
கடந்து பொது நலனை நோக்காகக்கொண்டு ஒழுக்கம், பொறுப்புக்கூறல் என்பவற்றின்
அடிப்படையில் செயற்பட முன்வரவேண்டும். அத்துடன் இணையத்தள சமூக
வலைத்தளங்களை கையாள்பவர்கள் பொது வெளியில் மதம் சார்ந்த கடுமையான
விமர்சனங்களை தவிர்த்து மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில்
தகவல்களை வெளியிட வேண்டும்.