சமூக ஊடகத்தளத்தில் சூழலியல் பாதுகாப்பு அமைப்புக்களின் செயற்பாடு: பயநர்களின் நடத்தை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts University of Jaffna, Sri Lanka
Abstract
தற்காலத்தில் சமூக ஊடகங்களானவை மக்களை இலகுவாக ஒன்றிணைக்கக்கூடிய மாபெரும் சக்திவாய்ந்த ஊடகமாக விளங்குவதனை அவதானிக்கமுடிகின்றது. அந்தவகையில் சமூக ஊடகத் தளங்களின் மூலம் மக்களிடத்தில் நடத்தை மாற்றத்தினை கொண்டுவரக்கூடிய தன்மை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதொன்றாகும். நடத்தை மாற்றம் என்பது குறிப்பிட்ட சமூகத்தினரிடையே ஒரு விடயம் தொடர்பான அறிவினையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துதலாகும். நடத்;தை மாற்றத் தொடர்பாடலானது அறிவூட்டல், மனப்பாங்கு மாற்றம், பயிற்சி என்ற கட்டங்களில் நிகழ்த்தப்படுகின்றது. அவ்வகையில், இந்த ஆய்வானது சமூக ஊடகங்களை அடிப்படையாகக்கொண்டு இயங்கக்கூடிய சூழலியல் பாதுகாப்பு அமைப்புக்கள் தங்களுடைய சமூக ஊடகத்தள செயற்பாடுகள் மூலம் பயநர்கள் மத்தியில் சூழலியல் பாதுகாப்புச் சார்ந்து நடத்தை மாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்துகின்றன என்பதனை அறியும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இவ் அமைப்புக்கள் சூழலியல் பாதுகாப்புச் சார்ந்து நடத்தை மாற்றத்தை பயநர்களிடத்தில் கொண்டுவருவதற்கு எவ்வாறான உத்திமுறைகளை கையாளுகின்றன மற்றும் அவை பயன்படுத்துகின்ற உத்திமுறைகள், சூழலியல் பாதுகாப்புச் சார்ந்து எந்தளவிற்கு பயநர்கள் மத்தியில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பவற்றை பற்றி மேலும் ஆய்வு செய்கின்றது. இந்த ஆய்வின் முக்கிய நோக்கங்களாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கும் சூழலியல் பாதுகாப்பு அமைப்புக்கள் சூழலியல் பாதுகாப்பிற்காக சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றன மற்றும் அவை மக்களிடையே என்ன வகையான விழிப்புணர்வு மற்றும் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பவற்றைக் கண்டறிவதாக அமைகின்றன. ஆய்வுக்கான முறையியலாக உள்ளடக்கப் பகுப்பாய்வு மற்றும் பெறுநர் சார் பகுப்பாய்வு ஆகிய இரு முறைமைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வகையில் ஆய்வாளரின் அவதானிப்பு, நேர்காணல், குவிமையக் கலந்துரையாடல், வினாக்கொத்து ஆகிய ஆய்வுமுறைகளின் மூலம் தரவுகள் திரட்டப்பட்டன. இதற்காக ஆய்வாளரால் ஆய்விற்கான மாதிரிகளாக யாழ்ப்பாணத்தில் சமூக ஊடகத் தளங்களை முதன்மையாகக் கொண்டு இயங்கக்கூடிய ஐந்து சூழலியல் பாதுகாப்பு அமைப்புக்களும் அவற்றின் சமூக ஊடகத் தளங்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு அமைப்பில் இருந்தும் தலா பத்துப் பேர் தெரிவு செய்யப்பட்டு நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், சமூக ஊடகங்கள் (முகப்புத்தகம், புலனம்) வழியாக வெளியிடப்படும் உள்ளடக்கங்கள்: விழிப்புணர்வு, செயற்றிட்டம் மற்றும் செயற்றிட்ட விளைவு என மூன்று பிரிவுகளாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுகிறதா, சமூக ஊடகத் தகவல்களின் தாக்கம் ஏற்படுகிறதா மற்றும் சுற்றுச்சூழல் நடத்தை மாற்றம் எவ்வாறு நிகழ்கிறது என்பவையும் பெறுநர் பகுப்பாய்வின் மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் முடிவுகளாக சமூக ஊடகங்கள், சூழலியல் பாதுகாப்பு அமைப்புக்களுக்கு ஒரு வலிமையான கருவியாக விளங்குகின்றன. அதாவது முகநூலில் பதிவேற்றப்படும் விழிப்புணர்வுசார் பதிவுகள் அனைவராலும் இலகுவாக விளங்கிக் கொள்ளக்கூடியவகையில் இலகு மொழிநடையுடனும் பார்த்ததும் கவரக்கூடியவகையில் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் பதிவேற்றப்பட்டு, நடத்தை மாற்றத்தை உருவாக்க வழிவகுத்திருந்தமையையும் அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.
மேலும், சூழலியல் பாதுகாப்பு அமைப்புக்களது சூழலியல் சார்ந்த தகவல்களின் எளிமையான மற்றும் தொடர்ச்சியான சமூக ஊடகங்கள் வாயிலான செயற்பாடுகள், மக்களின் உள்ளார்ந்த செயற்பாடுகள் ஆகியன நடத்தை மாற்றங்களைத் தூண்டுவதிலும் முக்கிய பங்குவகிக்கின்றன என்பன ஆய்வாளரால் கண்டறியப்பட்டன.