இந்து கலாசார சுற்றுலாவியல் - வலிகாமம் மேற்கினை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
சமகால உலகில் வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடைந்து வருகின்ற நாடுகளில் சுற்றுலாத்துறையானது பிரதேச பொருளாதார அபிவிருத்திக்கு அதிகளவிலான பங்களிப்பினைச் செய்கின்ற துறையாக மிளிர்ந்துவருகின்றது. ஒருவர் வாழ்ந்து வரும் இடத்திலிருந்து விலகி, குறுகிய கால அடிப்படையில் பயணம் செய்து அவற்றினூடாக மனநிறைவினைப் பெற்றுக் கொள்ளுதல் சுற்றுலா எனப்படும். இச்சுற்றுலாவியலானது பல்வகைப்பட்டதாகக் காணப்படுகின்ற போதிலும் அவற்றில் சில வகைகளே முக்கியமான சுற்றுலாவிற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட சுற்றுலா வகைகளுள் ஒன்றாகவே கலாசாரச் சுற்றுலா அமைகிறது. பிறநாட்டு மக்களது வரலாறு, நுண்கலைகள், மரபுரிமைகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றைக் காண்பதற்கு மேற்கொள்ளப்படும் பயணமே இதுவாகும். இச்சுற்றுலாவியலானது கலாசாரம், பாரம்பரியம், சுற்றுச்சூழல் போன்ற எண்ணக்கருக்களை மையமாகக் கொண்டே செயற்பட்டுவருகிறது. அந்தவகையில் இலங்கை போன்ற வளர்முகநாடுகளில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறையானது குறிப்பிடத்தக்களவு பங்களிப்பினை நல்கிவருகிறது. இலங்கையின் சென்னியாகத் திகழும் யாழ் குடாநாடானது பண்பாடும் பாரம்பரியமும் தழுவிய இடமாகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகவும் திகழ்கின்றது. இலங்கைப் பயணிகள் மட்டுமன்றி வெளிநாட்டுப் பயணிகளும் பண்பாட்டுச் சுற்றுலா நோக்கில் இங்கே சுற்றுப்பயணத்தை மேற்கொள்கின்றனர். இப்பண்பாட்டுச் சுற்றுலாவுடன் இணைந்ததாக மரபுரிமைச் சுற்றுலாத்துறையும் இங்கு குறிப்பிடத்தக்கவகையில் செல்வாக்குப் பெற்றுள்ளது. அந்தவகையில் யாழ் குடாநாட்டில் அமையப் பெற்றுள்ள வலிகாமம் மேற்குப் பிரதேசத்தை மையப்படுத்தி, அப்பிரதேச மக்களது பண்பாட்டினை பிரகடனப்படுத்தும் மரபுரிமைச்சின்னங்கள், அப்பண்பாட்டின் நிலைக்களங்களாக விளங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களான பொன்னாலை வரதராசப் பெருமாள் கோயில், பறாளை விநாயகர் ஆலயம், துணைவி புராதன ஆலயம், இராமாயண கதையுடன் தொடர்புடைய பிதிர்கடன் செய்யும் புனிதத்தீர்த்தத் தலமான திருவடிநிலை போன்ற ஆலயங்களும் இக்கட்டுரையில் ஆய்வுசெய்யப்படுகின்றன. இதற்காக களஆய்வின் மூலம் பெற்றுக் கொண்ட தரவுகள், வலிமேற்குப் பிரதேச செயலகத்தின் கலாசாரக் கிளையிலிருந்து பெறப்பட்ட கையேடு என்பன முதன்மை மூலங்களாக அமைகின்றன. அத்துடன் வலிமேற்கின் வரலாற்றுப் பிரசித்திபெற்ற ஆலயங்கள் தொடர்பாக வெளிவந்த நூல்கள், கட்டுரைகள், கும்பாபிஷேக மலர்கள், வடமாகாண சுற்றுலா வழிகாட்டல் கையேடு மற்றும் இணையப்பக்கங்கள் என்பன இந்த ஆய்வின் துணைமை மூலங்களாக அமைகின்றன. யாழ்ப்பாணத்தின் வலிமேற்கு பிரதேசத்திலுள்ள இந்துப்பண்பாட்டுச் சுற்றுலாத்துறைக்குச் சாதகமான இடங்களினை இனங்கண்டு அதனைப் பண்பாட்டுச் சுற்றுலாத்துறைக்குரிய இடமாக வெளிக்கொணர்தலே இந்த ஆய்வின் பிரதான நோக்கமாக அமைகின்றது. இந்த ஆய்வானது அடிப்படையில் களஆய்வாகவே அமைகின்றது. பொருத்தமான சந்தர்ப்பங்களில் வரலாற்று ஆய்வுமுறை, விபரண ஆய்வுமுறை என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.