நெடுந்தீவுப் பிரதேச மக்கள் மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதில் எதிர்நோக்கும் சவால்கள்

Abstract

இலங்கையின் வடக்குப் பகுதியில், யாழ்ப்பாண மாவட்டத்தின் கீழ் அமைந்த சப்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவு, உணவுப் பாதுகாப்பு மற்றும் சமநிலையான உணவுப் பழக்கவழக்கங்களை பின்பற்றுவதில் சவால்களை எதிர்கொள்கிறது. மக்கள் போசணை நிறைந்த உணவுப் பொருட்களின் கொள்வனவு மற்றும் நுகர்வில் காணப்படும் சிக்கல்கள், இப்பகுதி மக்களின் வாழ்வாதரத்தினைப் பாதிக்கும் முக்கியக் காரணியாக திகழ்கின்றன. நெடுந்தீவு J/03 கிராம சேவகர் பிரிவு மரக்கறிகளைப் பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கும் சவால்களை ஆராயும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுப் பிரதேசத்திலுள்ள 40 குடும்பங்கள் எளிய எழுமாற்று முறையில் தெரிவு செய்யப்பட்டு இல்லத்தரிசிப்புகள் மேற்கொள்ளப்பட்டது. மற்றும் 30 குழு விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. பங்கேற்பாளர்கள் விவசாயிகள், சமூக உறுப்பினர்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகள் ஆவர். சேகரிக்கப்பட்ட தரவுகள் விளக்க புள்ளிவிபர முறை கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன. 65% மக்கள் மீன்வளம் சார்ந்த வாழ்வாதாரத்தில் ஈடுபட்டிருப்பதால் மரக்கறி நுகர்வும் அதன் கொள்வனவு முறைகளும் குறைவாகவே காணப்படுகின்றன. 70% பங்கேற்பாளர்கள் போக்குவரத்து வசதியின்மை மற்றும் அதிகமான பயணச் செலவுகள் முக்கிய பிரச்சினையாகக் குறிப்பிட்டனர், மேலும் 55% குடும்பங்கள் மரக்கறி விலை உயர்ந்திருப்பதால் அவற்றை அடிக்கடி கொள்வனவு செய்ய முடியாத நிலை இருப்பதாக தெரிவித்தனர். கூடுதலாக, யாழ்ப்பாணம் போன்ற நகரப் பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படும் மரக்கறிகளில் 10 கிலோவிலிருந்து 2 கிலோ மட்டுமே சேதமின்றி அடைகிறது எனக் கண்டறியப்பட்டது. மேலும், வறண்ட காலநிலை, மழைக்கால பயிர்ச் சிக்கல்கள், குடிநீர் பற்றாக்குறை, மற்றும் உறுதியற்ற வருமானம் போன்ற சூழ்நிலைகள், மக்களின் மரக்கறி கொள்வனவுக்கு தடையாக உள்ளன. குறிப்பாக, இப்பகுதியில் கார்த்திகை மாதம் முதல் பங்குனி மாதம் வரை மட்டுமே நன்னீர் கிடைக்கிறது, அதன் பின் உப்புத்தன்மை அதிகரித்து விவசாயம் சாத்தியமற்றதாக மாறுகிறது. மேலும், மரக்கறிகளின் அவசியம் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளைமை கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவுகளாக நெடுந்தீவு பகுதியில் மரக்கறி கொள்வனவு தொடர்பான சவால்கள் பல பரிமாணங்களைக் கொண்டவையாக உள்ளன. முக்கியமாக, மக்கள் மீன் வளங்களை அடிப்படையாகக் கொண்ட உணவுப் பழக்கங்களை கொண்டிருப்பதும், போக்குவரத்து வசதிகள் குறைவாக இருப்பதும், அதிக விலை, காலநிலை மாற்றம் போன்றவை மரக்கறி கொள்வனவுக்கு தடையாக உள்ளன. இதனால் ஆய்வுப் பிரதேச மக்களுக்கு மரக்கறிகளில் இருந்து கிடைக்கும் போசாக்குக் குறைவாக காணப்படுகிறது. மேலும், யாழ்ப்பாண பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் மரக்கறிகள் அதிக பழுதடைதலுக்கு உள்ளாகுவதும், தீவில் தனித்துவமான சந்தை வாய்ப்பு இல்லாததும், மக்கள் மரக்கறி கொள்வனவில் விருப்பம் காட்டாமல் இருப்பதற்கான முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன. உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி வீட்டு தோட்டங்களை ஊக்குவிப்பதும், உணவில் மரக்கறியின் அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதும் பரிந்துரைகளாக முன்வைக்கப்படுகின்றன.

Description

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By