மாந்தீவு: ஒரு தொல்லியல் நோக்கு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts University of Jaffna, Sri Lanka
Abstract
இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் கிழக்கு மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள
மட்டக்களப்புப் பிரதேசத்தின் எல்லைகள் காலத்திற்கு காலம் மாற்றமுற்று வந்துள்ளன. பண்டைய மட்டக்களப்பானது வடக்கே வெருகலாற்றையும், கிழக்கே வங்காள விரிகுடாவினையும், மேற்கே ஊவா மலைத்தொடர் வெல்லஸப் பிரிவினையும், தெற்கே மாணிக்க கங்கையினையும் கொண்ட ஒரு பரந்த நிலப்பிரதேசமாக விளங்கியது. தற்போதைய மட்டக்களப்பானது வடக்கே திருகோணமலை மாவட்டத்தையும், வடமேற்கே பொலன்னறுவை மாவட்டத்தையும், தெற்கு மற்றும் தென்மேற்கே அம்பாறை மாவட்டத்தையும், கிழக்கே வங்காள விரிகுடாவினையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் நான்கு பக்கமும் ஆற்றால் சூழப்பட்ட தீவுப் பகுதியே மாந்தீவு ஆகும். இத் தீவுப் பகுதியிலே பிரித்தானியர் ஆட்சிக்கு முன்பு மக்கள் வாழ்ந்ததாகவும் பின்பு பிரித்தானியர் ஆட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து தொழுநோய் வைத்தியசாலை அமைப்பதற்காக மக்கள் இடம்பெயர்ந்து வவுணதீவு மற்றும் புதுநகர் பகுதிகளில் சென்று குடியேறியதாகவும்
குறிப்பிடப்படுகின்றது. இத் தீவுப்பகுதியிலே தொழுநோய் வைத்தியசாலை, தேவாலயம், இந்து ஆலயங்கள், விகாரை என்பன காணப்படுகின்றன. மாந்தீவானது 100 வருடங்களிற்கும் மேற்பட்ட பழமையும் பெருமையும் கொண்ட ஒரு தீவுப் பகுதியாகக் காணப்படுகின்றது. இத் தீவிற்கு தொன்மையானதும், தொடர்ச்சியானதுமான வரலாறு உண்டு என்பதனை இங்கு காணப்படும் தொல்லியல் மரபரிமைச் சின்னங்கள் எடுத்துக்காட்டுகின்றபோதும் இதுவரை இவ் விடயம் தொடர்பாக விரிவான ஆய்வுகள் எதுவும் இடம்பெறவில்லை. இவ்வாய்வு மாந்தீவு பற்றிய தகவல்களை ஆராய்ந்து, அங்கு காணப்படும் பழமையான சின்னங்கள், கலை, வரலாறு மற்றும் பண்பாட்டு அம்சங்களை அடையாளம் கண்டு அதன் மூலம் மாந்தீவின் தொல்லியல் மற்றும் வரலாற்று அடிப்படையிலான பண்பாட்டை வெளிப்படுத்தி, அங்கு வாழ்ந்த சமுதாயங்களின் தனித்துவத்தை இணங்காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இவ்வாய்வின் மூலம் மாந்தீவில் பிரித்தானியர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன என்பதை ஆராய்வதாகவும் அமைந்துள்ளது. இவ்வாய்விற்காக முதலாம் நிலைத் தரவுகளாக களஆய்வு, நேர்காணல், நேரடி
அவதானிப்பு, மூலநூல்கள், பிரித்தானியர்கால ஆண்டறிக்கைகள், நீலப்புத்தகக் குறிப்புக்கள், மிசனரிமார்களின் அறிக்கைகள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத் தரவுகளாக இலக்கியங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணையத்தளச் சஞ்சிகைகள் கட்டுரைகள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வானது வரலாற்று முறையில் அமைந்த விவரண ஆய்வு முறையியலைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.