வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்வதில் பழங்குடியின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அவற்றிற்குத் தீர்வு காண்பதில் மெதடிஸ்த திரு அவையின் வகிபாகமும்: பாட்டாளிபுரம் கிறிஸ்தவர்களை மையப்படுத்திய ஒரு நோக்கு

Abstract

பாட்டாளிபுரம் என்னும் கிராமம் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் பரம்பரையான பழங்குடியின தமிழர்களே வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில்களாக காடுகளில் தேன் சேகரிப்பது, விறகு சேகரிப்பது, நன்னீர் மீன்பிடி, கூலித்தொழில், மழையை நம்பி பயிரிடுவது, நகரங்களை நோக்கி யாசகம் பெறச் செல்வது என்பன பிரதானமாகக் காணப்படுகின்றன. அரச நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இங்கு பணிபுரிகின்றன. ஆனால் பொருளாதாரத்தில் தொடர்ந்தும் பின்தங்கியவர்களாகவே மக்கள் உள்ளனர். இதனால் இவர்கள் மத்தியில் மந்த போசாக்குள்ள பிள்ளைகளின் பிறப்பு, கல்வியறிவற்ற சமூகம், பாடசாலை இடைவிலகல், சிறுவர் தொழில், இளவயது திருமணம், போதைப் பொருள் பாவனை, குடிநீர் பிரச்சனை, இவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி உற்பத்திப் பொருட்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்தல் போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. இப்படியான பிரச்சனைகளை இனங்கண்டு, மெதடிஸ்த திரு அவையும் நீண்ட காலமாக இம்மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக பணியாற்றுகின்றது. பொருளாதார மேம்பாட்டிற்கு மெதடிஸ்த திரு அவையானது சிறுகைத் தொழிலுக்கான உதவிகள், வாழ்வாதார உதவிகள், தொழிலுக்கான சந்தைப்படுத்தல் வசதிகள், விழிப்புணர்வு கருத்தரங்குகள், மருத்துவ முகாம்கள், பாலர் பாடசாலை, சூரியமின்கலம் மூலம் தண்ணீர் விநியோகம், வீடுகள் கட்டிக் கொடுத்தமை போன்ற பணிகளை செய்ததுமிருப்பினும் இப்பணிகளினால் மக்களின் வாழ்வில் பொருளாதாரத்தில் சாதகமான மாற்றம் பெரிதளவாக ஏற்படவில்லை. மக்களுடைய பங்களிப்பும் குறைந்தளவிலேயே காணப்பட்டது. இவ்வாய்வின் விளைவாக திட்டங்கள் வெற்றியளிக்காமைக்கான காரணிகளை இனம் கண்டு, இவ்வாய்வின் முடிவில் பெறப்படும் தீர்வுகளை பொதுவெளிக்கு கொண்டு வந்து, இம்மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எவ்வாறு மெதடிஸ்த திரு அவை பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதை இனம் காண்பது இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். ஆய்வுக்காக கள ஆய்வு முறை பிரதானமாகப் பயன்படுத்தப்படுகின்றது. நேர்காணல், வினாக்கொத்து, குழுக்கலந்துரையாடல், அவதானிப்பு முறை போன்றவற்றினூடாக சேகரிக்கப்பட்ட தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆய்வின் முடிவுகள் பெறப்படுகின்றது. ஆயவின் மூலம் கண்டறியப்படும் பிரச்சனைக்கான காரணிகளை கிறிஸ்தவ இறையியல் கண்ணோட்டத்தில் நோக்கி, எவ்வாறு திரு அவையானது சமூக முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்கிறது என்பதையும் இவ்வாய்வு எடுத்துச் சொல்கின்றது. சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு சவாலான அடிப்படை பிரச்சனைகளை அடையாளங்கண்டு தீர்வு காண்பதன் மூலம் தன்நிறைவான சமூகத்தை உருவாக்கலாம். பொருளாதார மேம்பாட்டிற்கு நீண்டகாலத் தரிசனத்தோடு திரு அவை செயற்பட்டு, அடிப்படைக் காரணமான கல்வியைக் கொடுத்து, அறிவாற்றல் ரீதியாக மாற்றத்தைக் கொண்டு வந்தால் இக்கிராம மக்கள் எதிர்கொள்ளும் நீண்ட கால வாழ்வாதாரப் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்.

Description

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By