கத்தோலிக்கத் திரு அவையின் திருவழிபாட்டில் பண்பாட்டுமயமாக்கல்: வாகரைப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட ஒரு பார்வை
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
திருவழிபாட்டில் பண்பாட்டுமயமாக்கல் என்பது மண்ணிற்குரிய மகத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விடயமாகும். அதனடிப்படையில் கத்தோலிக்கத் திரு அவையின் திருவழிபாட்டுக் கூறுகள் ஒவ்வொரு பிரதேசங்களினதும் சூழமைவையும் அடிப்படையாகக் கொண்டு பண்பாட்டுமயமாக்கலிற்கு உட்பட்டுள்ளன. இத்தகைய பண்பாட்டுமயமாக்கலின் தேவையை இரண்டாம் வத்திக்கான் சங்கம் ஆழமாக உணர்ந்து கொண்டது. அதன் வாயிலாக உலகின் அனைத்துப் பகுதிகளிலேயும் கிறிஸ்தவம் தன்னை சூழலிற்கேற்ப தகவமைத்துக் கொண்டது. இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின்னரான காலப்பகுதிகளில் கத்தோலிக்கத் திரு அவைத் திருவழிபாட்டில் எவ்வாறு பண்பாட்டுமயமாக்கல் நிகழ்ந்துள்ளன என்பதையும், அவற்றின் வாயிலாக எவ்வாறான நன்மை, தீமைகள் விளைந்துள்ளன என்பதனையும் அறிந்து கொள்ளுதலை நோக்கமாகக் கொண்டு 'கத்தோலிக்கத் திரு அவையின் திருவழிபாட்டில் பண்பாட்டுமயமாக்கல்' என்ற ஆய்வு செய்யப்படுகின்றது. அதனை ஆய்வின் பிரதேச வரையறைக்குட்படுத்தி எனது பிரதேசமான மட்டக்களப்பு மாவட்ட வாகரைப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இரண்டாம் வத்திக்கான் சங்கம் பண்பாட்டுமயமாக்கல் பற்றிய விடயங்களை எடுத்துரைத்தும் அதன் தாக்கம் இன்னும் வாகரைப் பிததேசக் கத்தோலிக்கத் திரு அவைத் திருவழிபாட்டில் போதியளவு வேர்கொள்ளவில்லை என்பது ஆய்வின் பிரச்சனையாக முன்வைக்கப்பட்டுள்ளது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு திருவழிபாட்டில் பண்பாட்டுமயமாக்கல் பற்றிய இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பரிந்துரைகள் எடுத்துரைக்கப்பட்டு, அவை வாகரைப் பிரதேசக் கத்தோலிக்கத் திரு அவைத் திருவழிபாட்டில் எவ்வாறு உள்வாங்கப்பட்டுள்ளன என்பதனைக் கண்டறிந்து, அவற்றின் வாயிலாக விளைந்த சாதக, பாதக நிலைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இதன்படி இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பரிந்துiரைகள் தொகுத்துணர் முறையிலும், வாகரைப் பிரதேசக் கத்தோலிக்கப் பண்பாட்டு, வரலாற்று அம்சங்கள் எடுத்துரைக்கப்படுவதனால் வரலாற்று முறையும், பண்பாட்டுமயமாக்கலின் சாதக, பாதக விளைவுகளை விளக்க உய்த்துணர் முறையும் ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ் ஆய்வினூடாக இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பின்னர் பண்பாட்டுமயமாக்கல் கத்தோலிக்கத் திரு அவை எங்கும் பரவலாகக் காணப்படுகின்றது என்பது முன்வைக்கப்படுவதோடு, அதன் விளைவாக வாகரைப் பிரதேசக் கத்தோலிக்கர் மத்தியில் திருவழிபாட்டினை மையப்படுத்திய பல நன்மைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதும் தெளிவுபடுத்தப்படுகின்றன. மேலும் இவ் ஆய்வானது திருவழிபாட்டின் ஆழமான அர்த்தத்தையும் உன்னதத் தன்மையையும் புரிந்து கொள்வதற்கு பண்பாட்டுமயமாக்கல் அவசியம் என்பதனை எடுத்துரைப்பதோடு, தாய்த் திரு அவையின் திருவழிபாட்டின் முறைமைகளை அர்த்தமுள்ள முறையிலும், வழங்கப்பட்டுள்ள கோட்பாடுகளைச் சரியான முறையிலும் எதிர்காலத்தவர்க்கு இட்டுச் செல்லவும், ஆன்மீக மற்றும் ஒழுக்கவியல்களையும் திரு அவையின் பண்பாட்டுமயமாக்கல் ஊடாக சமுதாயத்திற்கு அர்த்தப்படுத்தவும் காரணியாக அமையலாம்.