மொழிப் பயன்பாடும் மொழிப் பகுப்பாய்வும்: விக்கென்ஸ்டைன் சிந்தனைகளின் பிரயோகத்தன்மை குறித்த ஒரு மீளாய்வு
Loading...
Files
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
மெய்யியற் சிந்தனை வளர்ச்சிப் போக்கில் 'மொழி' குறித்து, மொழிப் பிரச்சனைகள் எனத் தனித்துவமாகவும் பகுப்பாய்வு மெய்யியல் எனும் விடயப்பரப்பின் அடிப்படையாகவும் மேற்கொள்ளப்பட்ட வாதப்பிரதிவாதங்கள், கலந்துரையாடல்கள், ஆய்வுகள், முன்மொழிவுகள், கருதுகோள்கள் மெய்ப்பித்தல்கள் என்பன ஏனைய வரலாற்றுக் காலகட்டங்களை விடவும் இருபது மற்றும் இருபத்தோராம் நூற்றாண்டுகளில் அதிகளவிலான தாக்கத்தினைச் செலுத்தியுள்ளன. பகுப்பாய்வு மெய்யியலுக்கான அடிப்படைகள் சோக்கிரடீஸ் காலத்தில் இருந்தே போடப்பட்டிருந்தாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைக்கூறில் இங்கிலாந்தில் ஒரு மெய்யியல் கருத்துநிலையாகத் தோன்றி ஒரு சக்திமிக்க சிந்தனை இயக்கமாக வளர்ச்சி பெற்று, ஆங்கில மொழிவழியாக ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பின்னர் அமெரிக்காவிலும் அதன் தாக்கத்தினைச் செலுத்தியிருக்கிறது. இந்தப் பரம்பலில் விக்கென்ஸ்டைனின் சிந்தனைகள் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை ஏற்படுத்தியிருந்தன. அவரால் மொழிப் பகுப்பாய்வில் இலட்சிய மொழியொன்றைக் கட்டமைப்பதில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது. இதன்வழி மொழியின் அர்த்தம் மற்றும் அதன் தெளிவு முதன்மைப்படுத்தப்பட்டன. மேற்குறித்த அவரது அடிப்படைச் சிந்தனைகள் மொழி மெய்யியலில் ஏற்படுத்திய தாக்கத்தினை மீளாய்வதோடு தற்காலத்தின் அதன் பொருத்தப்பாட்டை அலசுவதே ஆய்வின் குறிக்கோளாகும். இவ்வாய்விற்கு மொழி குறித்த விக்கென்ஸ்டைனின் ஆய்வுகள்,அவரது ஆய்வுகள் குறித்து நடைபெற்றுள்ள ஆய்வுகள் மற்றும் ஏற்புடை இணையத்தளக் குறிப்புகள் அடிப்படையாகக்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து அறிவியல் சார் சிந்தனைக் கட்டமைப்புக்களுக்கும் 'மொழி' அடித்தளமாக அமைகிறது எனும் பகுப்பாய்வு மெய்யியலின் அடிப்படையானது மனிதர் ஆய்வுசெய்யக்கூடியதான அனைத்துத் விடயப்பரப்புக்களிலும் மொழியின் பயன்பாட்டுத்தன்மை குறித்து அகல, ஆழமாக ஆய்வுசெய்ய வழிவகுத்தது. அதாவது, மொழி பற்றிய பகுப்பாய்வே இங்கு முதன்மை பெற்றிருந்தது. புதிதாக அல்லது இல்லாத ஒன்றைக் கண்டுபிடிக்க என்று அல்லாமல் ஏற்கனவே இருக்கின்ற கருத்துக்களைக் கட்டமைப்பதில் மொழியின் பயன்பாடு குறித்து மென்மேலும் பகுப்பாய்வு செய்து அவற்றைத் தெளிவுபடுத்துவதே இப்பகுப்பாய்வு மெய்யியலின் பிரதான நோக்கமாக இருந்துவருகிறது. ஆனாலும் மொழியின் பயன்பாடு, செயற்பாடு என்பன வெறுமனே அதன் கட்டமைப்புடன் கூடிய அர்த்தவெளிப்பாடு மட்டுமல்ல. சமூகத்தேவைகள் அத்தேவைகளை நிறைவேற்றுவதற்கு மொழிசெய்யும் பங்களிப்புகள் குறித்தும் நோக்கவேண்டியுள்ளது. தற்கால எண்ணிம உலகில் இயற்கை மொழி - செயற்கை மொழி எனும் இருமைநிலைசார் மொழிப் பயன்பாடுகளை மொழியின் கட்டமைப்புக்கு அப்பால் சென்று நோக்கவேண்டியுள்ளது. அப்போதுதான் மொழிப் பகுப்பாய்வு என்பது எல்லாத் துறைகளினதும் பிரதான பண்புகள் அவற்றின் சாரங்கள், புலப்பாடுகள் குறித்து நடைபெறுவதாய் அமையும்.