1930 – 1958 காலப்பரப்புக்களில் வட இலங்கையின் கல்வி நிலை - ஈழகேசரி வெளிப்படுத்திய கல்விக் கருத்துக்களை அடிப்படையாகக்கொண்ட ஆய்வு

Loading...
Thumbnail Image

Date

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

University of Jaffna

Abstract

ஒரு தேசத்தின் வரலாற்றினைச் சரியாக இனங்காண்பதற்கு உறுதியான, நம்பிக்கையான வரலாற்று மூலங்கள் இன்றியமையாதவை. அதுவும் அவை சமகாலத்தவையாக அல்லது சம்பவம் நடைபெற்ற காலத்தவையாக அவற்றுடன் தொடர்புபட்டவையாக அமைகின்றபோது அத்தகைய வரலாற்று மூலங்கள் வரவேற்கப்படுகின்றன. அவ்வாறு அமைகின்றபோதுதான் அவை குறிக்கப்பட்ட தேசத்தினது வரலாற்றினை உறுதியாகப் பதிவ செய்து வைத்திருப்பதற்கான சாதகமான வாய்ப்பினை ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. அவ்வகையில் இருபதாம் நூற்றாண்டு இடைக்கால யாழ்ப்பாண மக்களது இருப்பினை, அவர்களது வாழ்வியல் முறைகளை வெளிப்படுத்துகின்ற வரலாற்று ஆவணங்களில் ஈழகேசரி என்ற வாராந்தப் பத்திரிகைக்கும் தனியிடமுண்டு. பொதுவாக அக்காலப்பகுதியில் தோன்றிய பத்திரிகைகள் எல்லாமே ஏதோ ஒரு மத அரசியல் மற்றும் தொழிலாளர்களது பின்னணியினை மையமாகக்கொண்டே தோன்றியிருந்தன. ஆனால் எவ்விதமான மதப்பின்னணியோ அல்லது அரசியல் சமூகப் பின்னணியோ கொண்டிருக்காமல் தமிழ் பேசும் மக்களது சகல துறை வளர்ச்சியிலும் அக்கறையினைச் செலுத்துகின்ற ஒரே நோக்கத்துடன் யாழ்ப்பாணத்தினைத் தளமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகையே ஈழகேசரிப் பத்திரிகை. இப்பத்திரிகை தான் வெளிவந்த காலப்பகுதியில் (1930 – 1958) காணப்பட்ட அக்கால யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கை மக்களது கல்விநிலை தொடர்பான பல தகவல்களைத் தருகின்றது. பொதுவாகவே இலங்கையானது பல இனமக்களையும் உள்ளடக்கிய பாரம்பரிய கல்வி, பண்பாட்டு நிறுவனங்களுடன் அடையாளங் காணப்படுகின்ற பிரதேசமாகக் காணப்படுகின்றது. இந்து சமுத்திரத்தின் மத்தியில் காணப்படுகின்ற இப்பிரதேசத்தினது சமுதாய வளர்ச்சியில் இலங்கையரசர்களது காலந் தொடக்கம் ஆங்கிலேயரது காலத்தினது முடிவுவரை கல்வியின் முன்னேற்றமானது உன்னத நிலையினை அடைந்திருந்ததென்பதனை ஆதாரங்கள் மூலமாக அறியமுடிகின்றது. அவ்வகையில் இத்தகைய இலங்கை மக்களது இருபதாம் நூற்றாண்டினது இடைக்காலத்தேய கல்விநிலையின் தன்மைகளை எடுத்துரைக்கின்ற வரலாற்று ஆவணமாகக்கூட நாம் இப்பத்திரிகையினைக் காணலாம். அதுமட்டுமன்றி இலங்கை மக்களது கல்விநிலையினை உயர்த்துவதற்கான ஆலோசனைகளையும்கூட அது அவ்வப்போது தனது பத்திரிகையின் வெளியீடுகளின் மூலமாகத் தெரிவித்தும் வந்தது. இதனது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் என்பவை எளிய மொழி நடையில் காணப்பட்டதன் பின்னணியில் இது தரும் தகவல்கள் இலகுவான முறையில் மக்களைச் சென்றடைந்தது. குறிப்பாகச் சுயமொழிக்கல்வி, இலவசக்கல்வி, சமயக்கல்வி, தொழிற்கல்வி, சர்வகலாசாலையின் உருவாக்கம், என்பவை அக்காலப்பகுதியில் இலங்கை மக்களது கல்வி முன்னேற்றந் தொடர்பாக ஈழகேசரியினது பிரதான குறிக்கோள்காக அமைந்திருந்தன. இதனைவிட இப்பத்திரிகையானது மாணவர்களது நலன்கள், ஆசிரியர்களது நலன்கள் என்பனவற்றிலும் அக்கறையுடன் செயற்பட்டது. எனவே ஈழகேசரி வெளிவந்துகொண்டிருந்த காலப்பகுதிக்குரிய இலங்கை மக்களது கல்விக் கட்டமைப்பினை அறிய விரும்புகின்ற எவரும் இப்பத்திரிகையினை விலக்கிவிட்டுச் செல்ல முடியாதென்பதே உண்மை.

Description

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By