யாழ்ப்பாணத்தில் மல்லாரி இசை: கலைஞர்களும் தனித்துவங்களும்

Abstract

மல்லாரி இசையானது முற்றுமுழுதாக நாதஸ்வர தவில் வாத்தியங்களுக்கே உரித்துடைய இசையாக இருந்து வருகின்றது. இது ஆலயங்களின் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு முக்கியமான வாசிப்பு முறையாகப் பேணப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் இம் மல்லாரி வாசிப்பு முறையானது சிறுசிறு ஆலயங்களில் தனிநபர் வாசிப்பாக வாசிக்கப்பட்டு வந்தாலும் காலப்போக்கில் மல்லாரிகளின் வாசிப்பிலே குழுச் செயற்பாடுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இக் குழுச் செயற்பாடுகளுக்கான காரணங்களில் மிகவும் முக்கியமானதாகச் சொல்லப்படுவது ஆலயங்களும் அதன் நிர்வாகமும் உற்சவங்களைப் போட்டி மனப்பாங்கில் செய்வதும், நாதஸ்வர, தவில் கலைஞர்களுக்கு மக்கள் மத்தியிலுள்ள நட்சத்திர அந்தஸ்த்தையொத்த பிரபல்யமும் வெகுசனக் கவர்ச்சியுமாகும். இதன் காரணமாக நாதஸ்வர தவில் கலைஞர்கள் ஆலயங்களின் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் மேலதிக வலுச் சேர்ப்பவர்களாக இருப்பது மட்டுமன்றி ஆலயங்களின் சிறப்பு ஆஸ்தானக் கலைஞர்களாவும் மிளிர்கின்றார்கள். ஒவ்வொரு திருவிழா உபயகாரர்களும் போட்டிபோட்டு பல குழுக் கலைஞர்களை அழைப்பதால் பல நாதஸ்வர தவில் கலை ஜாம்பவான்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் சங்கமிப்பது என்பது யாழ்ப்பாணத்து நாதஸ்வர தவில் பாரம்பரியத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இது யாழ்ப்பாணத்தில் மட்டுமே காணக்கூடிய ஒரு சிறப்பம்சமாகும். இன்று மல்லாரி தனிநபர் வாசிப்பிலிருந்து படிப்படியாக விடுபட்டு குழு வாசிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. இப்பின்னணியில் யாழ்ப்பாணத்தில் மல்லாரி இசையினதும் இசைக் கலைஞர்களினதும் தனித்துவத்தைத் திரைவிலக்க இவ்வாய்வு முயல்கிறது. பாரம்பரிய இசையில் தனித்துவம் என்றால் என்ன? யாழ்ப்பாணத்தில் மல்லாரி வாசிப்பில் தனிக்கலைஞர் குழு மற்றும் பிரதேச ரீதியான தனித்துவங்கள் காணப்படுகின்றனவா? தவில் மற்றும் நாதஸ்வரத்தில் மல்லாரி வாசிப்பில் யாழ்ப்பாணம் தென்னிந்தியாவிலிருந்து மாறுபடும் போக்கினைக் கொண்டுள்ளதா? போன்ற கேள்விகளுக்கான விடைகளை இவ்வாய்வு கலைஞர்களுடனான நேர்காணல் நேரடி அவதானிப்புகள் என்பவற்றினூடு முன்வைக்கிறது.

Description

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By