கத்தோலிக்க நாட்டுக்கூத்துக் கலையும் அதன் சமகால நிலையும்: நாவாந்துறைப் பங்கை மையப்படுத்திய பார்வை
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna, Sri Lanka
Abstract
இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள நாவாந்துறைப் பங்கு நாட்டுக்கூத்துக் கலைகளில் சிறந்து விளங்கிய பகுதிகளில் ஒன்று. இப்பங்கில் 1930ஆம் ஆண்டுக்குப் பின்னர் கத்தோலிக்க நாட்டுக்கூத்துக் கலை சிறப்பான வளர்ச்சியை எட்டியிருந்தது. இப்பங்கில் 2023ஆம் ஆண்டு ஆவணி மாதம் வரை தொண்ணூறு கலைப்படைப்பாக்கங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. அவற்றுள் அறுபத்தெட்டு நாட்டுக்கூத்துக்களும், எட்டு இசை நாடகங்களும், மூன்று நவீன நாடகங்களும், இரு சமூக நாடகங்களும், இரு நகைச்சுவை நாடகங்களும், இரு தெருக்கூத்துக்களும், ஒரு இலக்கிய நாடகமும், நான்கு திருப்பாடுகளின் காட்சியும் அரங்கேற்றப்பட்டுள்ளன. நாட்டுக்கூத்து கலையில் ஆர்வம் காட்டிய அண்ணாவிமார்களில் பெரும்பாலானோரின் மரணம், ஒருசிலர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தமை ஆகிய காரணங்களினால் தற்போது ஒருசிலர் மட்டுமே நாவந்துறையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் மூவர் நாட்டுக்கூத்துக்களை அரங்கேற்றும் அண்ணாவியர்களாகவும் ஒருவர் பாடகராகவும் திருப்பாடுகளின் காட்சியினைத் தயாரிப்பவராகவும் விளங்குகிறார். முன்னர்க் குறிப்பிட்ட மூவரும் கூத்துக்களைப் பழக்கி, அரங்கேற்றுபவர்களாக மட்டுமே காணப்படுகின்றனர். நான்காம் அண்ணாவியார் திருப்பாடுகளின் காட்சிகளை நெறியாழுகை செய்பவராகவும் படைப்பாக்கங்களை எழுதுபவராகவும் காணப்படுகிறார். இது சமகாலத்தில் நாவந்துறையில் நாட்டுக்கூத்துக் கலையின் வீழ்ச்சி நிலையை எடுத்துரைக்கின்றது. எனவே, சமகாலத்தில் நாட்டுக்கூத்துக் கலை நாவாந்துறைப் பகுதியில் வழக்கொழிந்து வருவதற்கான சமூகப் பொருளாதார அரசியல் காரணிகளை ஆராயும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த ஆய்வில் நாட்டுக்கூத்துக் கலையின் தோற்றமும், வளர்ச்சியும் வரலாற்றுப் பார்வையில் நோக்கப்படவுள்ளன. குறிப்பாக இலங்கையில் போத்துக்கேயரின் வருகையுடன் தோற்றம் பெறுகின்ற கத்தோலிக்க நாட்டுக்கூத்துக்களின் வரலாறு குறித்தும் தமிழர்கள் செறிந்து வாழும் சில மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள இந்நாட்டுக்கூத்துகள் பற்றிய கத்தோலிக்கக் கண்ணோட்டம் குறித்தும் ஆய்வில் அலசப்படவுள்ளன. குறிப்பாக, நாவந்துறைப் பங்கின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய குறிப்புகளுடன் அங்கு நடந்தேறிய கத்தோலிக்க நாட்டுக்கூத்துக்கள், அவற்றிற்குப் பங்களிப்புச் செய்தவர்கள், ஏதுவாக அமைந்த பிற கலைகள் ஆகியவை ஆய்விற்குட்படுத்தப்படும். நாட்டுக்கூத்துக்கள் தவிர்ந்த கத்தோலிக்க இசை நாடகங்கள், நவீன நாடகங்கள், சமூக நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள், தெருக்கூத்துக்கள், இலக்கிய நாடகங்கள், திருப்பாடுகளின் காட்சிகள் போன்றவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த ஆய்விற்கான முதன்மைத் தரவுகள் நேர்காணல், குழுக் கலந்துரையாடல், அவதானிப்புமுறை வழியாக சேகரிக்கப்;படும். நாட்டுக்கூத்துக்கலை தொடர்பான நூல்கள், கட்டுரைகள், சஞ்சிகைகள் போன்றவற்றிலிருந்து பெறப்படும் இரண்டாம்நிலைத் தரவுகளும் ஆய்விற்குட்படுத்தப்படும். இத்தரவுகள் தொகுத்தறிவு, வரலாற்று முறையியல், ஒப்பீட்டு அணுகுமுறை என்பவற்றினூடாக ஆராயப்படவுள்ளன. மேலும், நாட்டுக்கூத்துக்கலை வழக்கொழிந்து வருவதற்கான காரணங்களைக் ஆராய்வதுடன், அவற்றை மீண்டும் புதுப்பொலிவுடன் இடம்பெறச்செய்வதற்கான வாய்ப்புகளை இனங்கண்டு அவை பரிந்துரைக்கப்படும்.