ஈழத்தில் ஒல்லாந்தர் காலத்தில் தமிழ் இலக்கியங்கள் - சமூக அரசியல் நோக்கு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
M.Phil. in Tamil
Abstract
ஈழத்தில் ஒல்லாந்தர் ஆட்சிக் காலமானது அரசியல் சமூக ரீதியாக மட்டுமன்றி இலக்கிய ரீதியாகவும் கவனிப்பிற்குரிய காலப்பகுதியாகத் திகழ்ந்துள்ளது. புரட்டஸ்தாந்து சமயப் பின்னணி கொண்ட ஒல்லாந்தர் தமது பொருளாதார நலன்களை முதன்மைப்படுத்தி அரசியற் செயற்பாடுகளை முன்னெடுத்தனர். போர்த்துக்கேயரின் நெகிழ்வற்ற செயற்பாடுகளோடு ஒப்பிடுகையில் ஒல்லாந்தரின் அரசியல் ஓரளவு நெகிழ்வுப் போக்காக இருந்தமையால் அக்காலத்தில் குறிப்பிடத்தக்களவு தமிழ் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. ஒல்லாந்தர் காலத்தில் தோற்றம் பெற்ற தமிழ் இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வில் அச்சுருவில் வெளிவந்த இலக்கியங்களோடு கையெழுத்துப் பிரதிகளாக உள்ள இலக்கியங்கள் பலவற்றையும் இனங்காணக் கூடியதாக இருந்தமையும், அவற்றின் மூலம் அக்கால சமூக, அரசியல் கூறுகளை ஆய்வு செய்யக்கூடியதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஆய்வு அறிமுகம், வரலாற்றுப் பின்னணி, சமயமும் சமூக அரசியலும், மரபுகளும் வழக்காறுகளும், கலைகள், அதிகார அடுக்கமைவு, ஈழமும் இந்தியத் தொடர்பும் ஆகிய பிரிவுகள் இங்கு ஆய்வின் மையங்களாக அமைந்துள்ளன. போர்த்துக்கேயர் ஆட்சியில் நெருக்கடிகள் பலவற்றை எதிர்கொண்ட சைவசமயம் ஒல்லாந்தர் ஆட்சியில் தனது அடையாளத்தை நிலைப்படுத்த பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டது. அதேவேளை ஒல்லாந்தரால் பெரிதும் பாதிப்பிற்குள்ளான கத்தோலிக்க சமயம் நெருக்கடியிலிருந்து தன்னைப் பேணிக்கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது. சமூக அமைப்பிலே சமயம் தீர்க்கமான சக்தியாகத் தொழிற்பட்டு நுண் அரசியல் சார்ந்து இயங்கியுள்ளது. அதேவேளை பண்பாட்டுக் கூறுகளிலும் சடங்குகள், நம்பிக்கைகள், வழக்காறுகள், கலைகள் முதலியன பிரதான இடத்தைப் பெற்றுள்ளன. ஒல்லாந்தரின் ஆட்சிச் செயற்பாடுகள், பிரபுத்துவம் தமது இருப்பைத் தக்கவைக்க மேற்கொண்ட உத்திகள், தொழில், அதிகாரம் என வலிமையான வகையில் தொழிற்பட்ட சாதியம், ஆணின் மேலாதிக்க நிலை என்பன ஆய்வில் விரிவாக எடுத்தாராயப்பட்டுள்ளது. மேலும் புவியியல் அருகமைவும் பண்பாட்டு நெருக்கமும் ஈழத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான தொடர்பில் ஏற்படுத்திய பாதிப்புக்கள் குறித்த விடயங்களும் தனித்த கவனிப்பைப் பெற்றுள்ளன. இலங்கையில் பிற்பட்ட கால இலக்கிய வளர்ச்சிக்கும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒல்லாந்தர் காலம் பெற்றுள்ள இடத்தை மதிப்பிடுவதற்கும் அக்கால இலக்கியங்கள் ஊடான சமூக அரசியலை மையப்படுத்திய இவ் ஆய்வு பல்வேறு விடயங்களை இனங்காட்டியுள்ளது