கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் நிலப்பயன்பாட்டு மாற்றம் (2002 2020) : தொலையுணர்வு மற்றும் புவியியல் தகவல் ஒழுங்கினை அடிப்படையாக கொண்டது
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
ஒரு நாட்டில் காணப்படும் வளங்களில் நிலவளமானது மிகப்பெறுமதிமிக்கதும் மிக அவசியமான வளமாகவும் காணப்படுகின்றதுடன் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடிப்படையானதாகவும் அமைந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டமானது கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தம், சுனாமி, சனத்தொகை அதிகரிப்பு, திட்டமிடப்படாத மனித நடவடிக்கைகள் போன்றவற்றினால் நிலவளமானது துரித மாற்றத்திற்கு உட்பட்டு வந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேச செயலகப் பிரிவில் நிலப்பயன்பாட்டு வகைப்பாட்டினை அடையாளம் காணுதல், காலப்பகுதிகளுக்கிடையிலான நிலப்பயன்பாட்டு வகைகளினது மாற்றங்களினை இனங்காணல், ஆய்வுப்பிரதேசத்தில் நிலப்பயன்பாட்டு மாற்றங்களையும், மாற்றங்களை ஏற்படுத்திய காரணிகளை இனங்காணல் போன்ற பிரதான நோக்கங்களாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலப்பயன்பாட்டு மாற்றப்பகுப்பாய்வினை மேற்கொள்வதற்காக புவியியல் தகவல் ஒழுங்கு மற்றும் தொலையுணர்வு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் நிலப்பயன்பாட்டு மாற்றம் காலரீதியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கான தரவுகளாக முதனிலைத் தரவுகளான கள அவதானம் மூலமும், இரண்டாம் நிலைத்தரவுகளான உயர் தெளிதிறன் செய்மதிப்படம், நில அளவைத் திணைக்களத்தின் இடவிளக்கப்படம் மற்றும் பூநகரி பிரதேச செயலக புள்ளிவிபரத்தரவுகளும் பயன்படுத்தப்பட்டன. பூநகரி பிரதேச செயலக பிரிவினது 2002 ஆம் ஆண்டு, 2014 ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆண்டு நிலப்பயன்பாட்டுப்படங்கள் உருவாக்கப்பட்டு மூன்று காலத்திற்கும் உரிய நிலப்பயன்பாட்டு படங்கள் ஒப்பீடு செய்யப்பட்டு நிலப்பயன்பாட்டு மாற்றங்கள் கண்டறியப்பட்டன. குறித்த ஒரு நிலப்பயன்பாடு இன்னொரு நிலப்பயன்பாடாக மாறியுள்ளது என்பதை கண்டறிய நிலப்பயன்பாட்டு மாற்றத்தாய மதிப்பீட்டு அட்டவணை பயன்படுத்தப்பட்டுள்ளன. நிலப்பயன்பாட்டு மாற்றத்தாய அட்டவணை மூலம் குறித்த ஒரு நிலப்பயன்பாடு எவ்வளவு ஹெக்கடயர் அளவில் மாற்றம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு அதிகளவிலான மாற்றங்கள் காடுகள், வீட்டுத்தோட்டம், விவசாய நிலம், நீர்நிலைகள் போன்ற நிலப்பயன்பாட்டு வகை சார்ந்து ஏற்பட்டுள்ளன. சனத்தொகை அதிகரிப்பின் காரணமாக வீட்டுத்தோட்டக்குடியிருப்புக்கள், விவசாய நிலம் அதிகரித்துள்ளதுடன் காடுகள் மற்றும் நீர் நிலைகள் குறைவடைந்துள்ளன. பூநகரி பிரதேச செயலக பிரிவில் 18 வருட காலப்பகுதிக்கு இடையில் 678.94 ஹெக்கடயர் பரப்பு காடுகள் குறைவடைந்துள்ளது. பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் நிலப்பயன்பாட்டு மாற்றம் அதிகளவில் கிராமசேவையாளர் பிரிவின் அடிப்படையில் பள்ளிக்குடா, தெளிகரை நல்லூர், பொன்னாவெளி, பரமன்கிராய் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன என்பது இடம்சார் ரீதியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலப்பயன்பாட்டு மாற்றம் ஆனது சனத்தொகை அதிகரிப்பு, யுத்தம், விவசாயம், குடியேற்றத்திட்டம் போன்றவற்றால் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த ஆய்வின் மூலம் பெறப்படும் நிலப்பயன்பாடு மற்றும் நிலப்போர்வை தொடர்பான மாற்றம் தொடர்பான தகவல்கள் இடம்சார் ரீதியில் தற்போதைய நிலைமைகளை விளங்கிக்கொள்ளவும் நிலப்பயன்பாட்டு பாங்குகள் தொடர்பாக விளங்கிக்கொள்ளவும் அதனடிப்படையில் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், திட்டங்களை தீர்மானமெடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தவும் வழிகாட்டியாக அமையும். அத்துடன் நிலப்பயன்பாட்டு பொருத்த மதிப்பீடு மற்றும் நிலப்பயன்பாட்டுத்திட்டமிடல் போன்ற செயற்பாட்டினை மேற்கொள்ளவும் இந்த ஆய்வு பரிந்துரை செய்கின்றது.