வரலாற்றுக்கு முற்பட்ட கால பண்பாட்டுச் சின்னங்கள்: சப்ரகமுவ மாகாணத்தை அடிப்படையாகக்கொண்டது
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts University of Jaffna, Sri Lanka
Abstract
பண்டைய நாகரிகச் சிறப்புப் பெற்ற பிராந்தியங்களில் தென்னாசியா முக்கியமானதொரு இடத்தினைப் பெற்று வருகின்றது. இங்கே கற்காலம் தொட்டு மனிதன் மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறும் விதத்தில் அவன் விட்டுச்சென்ற கலாசார எச்சங்கள் அதிகளவாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். தென்னாசியாவில் நீண்ட பாரம்பரிய வரலாற்று மரபு கொண்ட ஒரு நாடாக இலங்கை திகழ்கின்றது. இலங்கையின் நாகரிக வளர்ச்சியை தொல்லியல் அடிப்படையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்று உதய காலம், வரலாற்றுக் காலம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து வகைப்படுத்தலாம். இதில் வரலாற்றுக் காலம் என்பது எழுத்து மூலாதாரங்கள் மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட மூலாதாரங்களன்றித் தொல்பொருட்ச் சான்றுகளை அடிப்படையாகக்கொண்டு வரலாறு கணிக்கப்பட்ட காலமாகக் கருதப்படுகின்றது. வட இலங்கை தொட்டுத் தென்னிலங்கை வரை வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்கள் வாழ்ந்துள்ளதை அடையாளப்படுத்தும் ஒரு மாகாணமாகவும், இடைக்கற்காலத்திற்குரிய பலாங்கொடை மனிதன் வாழ்ந்த இடமாகவும் சப்ரகமுவ மாகாணம் திகழ்கின்றது. இம்மாகாணத்தில் காணப்படுகின்ற குகைகளில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் பல்வேறுபட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதனால், இச்சான்றாதாரங்களை அடிப்படையாகக்கொண்டு, வரலாற்றுக்கு முற்பட்ட கால பண்பாட்டுச் சின்னங்கள் பற்றிய ஓர் ஆய்வாக இவ்வாய்வு அமைகிறது. சப்ரகமுவ மாகாணத்தில் அதிகளவாக கற்காலத்திற்குரிய இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அங்கு பல்வேறு வரலாற்றுக்கு முற்பட்ட காலச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை பற்றிய புரிந்துணர்வு மக்களிடத்தில் காணப்படாததனாலும், இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட பண்பாட்டுச் சின்னங்களைச் சரியான முறையில் ஆவணப்படுத்தாதனாலும், இந்நினைவுச்சின்னங்கள் அழிவடையும் தருவாயிலும் காணப்படுவதனாலும், வரலாற்றுக்கு முற்பட்ட கால நினைவுச் சின்னங்களை, சரியான முறையில் வெளிப்படுத்தும் வகையில் இவ்வாய்வு முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வாய்வின் நோக்கமாக, வரலாற்றுக்கு முற்பட்ட கால குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் எச்சங்களின் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டி, அவற்றினூடாக இலங்கையின் வரலாற்றை வெளிப்படுத்துவதாகும். இவ்வாய்வானது முதல் நிலை, இரண்டாம் நிலைத்தரவுகளின் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தொல்லியல் மற்றும் களவாய்வு அடிப்படையிலான ஆய்வு முறையியலைப் பின்பற்றி மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாய்வின் மூலம் கற்கால மக்களின் பண்பாட்டு அம்சங்களையும், தொழினுட்ப அறிவின் பரவலையும் அறிவதோடு, இடைக்கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாகப் புதியகற்காலப் பண்பாடு இருந்ததற்கான அறிகுறியும் இம்மாகாணத்தில் அடையாளம் காணமுடியும் என்பது இவ்வாய்வின் முடிவாக விளங்குகின்றது.