சைவசித்தாந்தம் கூறும் பதியும் அத்வைதம் கூறும் பிரம்மமும்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
இந்திய மெய்யியல வரலாற்றிலே சைவசித்தாந்தம் சிறப்பானதோர் இடத்தினைப் பெற்றுள்ளது எனலாம். அத்தகுதிப்பாட்டினை மெய்கண்ட சாத்திரங்களே பெற்றுத் தந்துள்ளன. அவை பதினான்கு ஆயினும் அவற்றிலே காணப்படும் கொள்கைகளில் வேறுபாடு காணப்படவில்லை என்பதுடன் அடிப்படைக் கொள்கைகளை விளக்குவதில் அவை தம்முள் ஒன்றுக்கொன்று விரிந்தும் சுருங்கியும் அமைந்தனவே தவிர கருத்து நிலையிலே மாறுபாடானவையல்ல. இதனடிப்படையில் சைவ சித்தாந்தம் கூறும் பதி விளக்கமானது சங்கரர் கூறும் வேதாந்த பிரம்மம் பற்றிய கருத்துடன் எவ்வாறான வகையில் ஒப்பீட்டு அடிப்படையில் தொடர்புபடுவதாகக் காணப்படுகின்றது என்பதனை ஆராய்வதாக இந்த ஆய்வானது அமைகிறது. சைவசித்தாந்தம் கூறும் இறையிருப்பு, வேதாந்தம் கூறும் பிரம்மம் ஆகிய இரண்டிற்குமான ஒப்பீட்டுரீதியான தெளிவினை வெளிப்படுத்துவதே இந்த ஆய்வின ஆய்வுப்பிரச்சினையாகும். இதனைத் தீர்க்கக் கூடிய வகையில் ஆய்வு நோக்கமானது கட்டமைக்கப்பட்டுள்ளது. வேதாந்த பிரம்ம நிறுவலைத் தெளிவுபடுத்தல் மற்றும் சைவசித்தாந்த பதியிருப்பினை ஆராய்தல் ஆகிய முதன்மை நோக்கங்களை அடிப்படையாக்க் கொண்டுள்ளதுடன் ஆய்வு நோக்கத்தினை ஈடுசெய்யக்கூடிய வகையில் ஆய்வு வினாக்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆய்வு முறையியலானது இரண்டாம் நிலைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளதுடன் ஆய்வுக்கான தரவுகள் அனைத்தும் அண்மைக்காலங்களில் வெளிவந்த ஆய்வுச்சஞ்சிகைகள், ஆய்வு நூல்கள், வருடாந்த இதழ்கள் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்டுள்ளன. வேதத்திற்கு உரை எழுதியவர்களுள் சங்கரரின் கருத்தானது முதன்மையானதாக நோக்கப்படுகின்றது. சங்கரரின் அத்வைதமானது ஆன்மா பிரம்ம்மாவதனைக் குறிப்பிட்டு நிற்கிறது. அதேபோல் சைவசித்தாந்தமானது பதியாகிய சிவனை அடைவதனை குறிப்பிடுகின்றது.