இலங்கையின் ஐதீக கதைமரபுகளில் விஐயன் மற்றும் உக்கிரசிங்கன் மாருதப்புரவீகவல்லி கதைகள் ஓர் ஒப்பீட்டாய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka
Abstract
எழுத்துக்களின் உருவாக்கத்திற்கு முன்னரான வரலாற்றுக்கு முற்பட்டகால வரலாற்றினை விளக்குவதில் ஐதீக கதைமரபுகளுக்கு முக்கிய பங்குண்டு. இவை ஒரு பிரதேசத்தின் அல்லது நாட்டின் வழமைகளை அல்லது தொன்மையை விளக்குவதன் பொருட்டு எடுத்துரைக்கப்படுவதால் அப்பிரதேசத்திற்குரிய தொட்டுணர முடியாத மரபுரிமைச் சொத்துக்களாகவும் விளங்குகின்றன. ஆசியாவின் தொன்மையான அரச உருவாக்கமானது பெரும்பாலும் ஐதீககதை மரபுகளுடன் தொடர்ப்புபடுத்தப்பட்டிருப்பது பொதுவானதொரு பண்பாக காணப்பட்டிருந்தது. இப்பண்பினை கௌண்டின்யர், விஐயன், அர்ச்சுனன் கதைமரபுகளுக்கிடையிலான ஒற்றுமைகளுடாக காணமுடிகின்றது. இக்கதை மரபுகள் மிகநீண்டதொரு தொன்மையான வரலாற்றினை விளக்குவதன் பொருட்டு பல வடிவங்களிலும், இலக்கிய காவியப்பண்பிற்குகேற்ப மாற்றமடைந்த வகையிலும், காலவரன்முறையற்ற வகையிலும் வரலாற்று இலக்கியங்களில் இடம்பிடித்தன. இதனால் ஐதீக்கதைமரபுகளில் நம்பகத்தன்மையை எதிர்பார்க்கமுடியாதெனிலும் அவற்றிலும் ஒரு சில தொன்மைச் சான்றுகளிருப்பதனை மறுப்பதற்கில்லை. இதனை பிற்கால தொல்லியல் ஆய்வுகளுடன் ஐதீககதைமரபுகளை ஒப்பிட்டு ஆராய்வதனூடாகவே அறிந்துகொள்ளலாம். இந்தவகையில் தமிழ் மக்களிடையே செல்வாக்கு பெற்றிருக்கின்ற உக்கிரசிங்கமன்னன், மாருதப்புரவீகவல்லி பற்றிய வரலாற்றுக் கதைகளை இலங்கை வரலாறு பற்றி எழுந்த விஐயனது வரலாற்றுக் கதையுடன் ஒப்பிட்டு, வடஇலங்கை அரசமரபின் தோற்றம் பற்றிய ஆய்வில் அக்கதையின் வகிபாகத்தை மதிப்பீடு செய்வதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாக அமைகின்றது. இவ்வாய்வின் இன்னொரு நோக்கமாக விஐயனது வரலாற்றுக்கதை மற்றும் உக்கிரசிங்கமன்னன், மாருதப்புரவீகவல்லி கதை ஆகியவற்றில் வரும் வரலாற்றுச் சம்பவங்களினை தொல்லியல் ஆதாரங்களுடன் ஒப்பிட்டு, கதையின் உண்மைத் தன்மையை மீளாய்வு செய்வதாகவும் அமைகின்றது. இவ்வாய்வு நோக்கங்களை நிறைவுசெய்வதன் பொருட்டு ஆய்வுடன் தொடர்புடைய வரலாற்றுக் கதைகளினை உள்ளடக்கியுள்ள மூலநூல்களிலிருந்தும், இம்மூலநூல்களினை அடிப்படையாகக் கொண்டெழுந்த இரண்டாம்தர நூல்களிருந்தும் தரவுகள் பெறப்பட்டிருப்பதுடன், இரண்டாம்தர தரவுகள் தொல்லியல் களப்பயணங்கள், நேரடி நேர்காணல் ஊடாகவும் சேகரிக்கப்பட்டுள்ளன. முதல்தர தரவுகள் இரண்டாம்தர தரவுகளுடன் ஒப்பிட்டு ஆராயப்பட்டு அதனை பகுப்பாய்வு செய்வதாகவே இவ்வாய்வு அமைகின்றது.