இலங்கையின் இராமாயணச் சுற்றுலா மையங்கள்.

Abstract

உலகில் வளர்ச்சி கண்ட பெருந்துறையாகச் சுற்றுலாத்துறை விளங்குகின்றது. சுற்றுலா மூலமாக நாட்டிற்கு அதிக வருமானம் கிடைப்பதனால், அத்துறையில் தொழில்வாய்ப்புக்களும் பெருகிவருகின்றன. இவ்வாறு காலமாற்றத்திற்கேற்ப வளர்ந்து நிற்கும் சுற்றுலாத்துறையை மையமாகக் கொண்டு இந்துநாகரிக விடயப்பரப்பிற்குள் “இந்துக்கலாசாரச் சுற்றுலா” எனும் பாடநெறி வளர்ச்சிகண்டுள்ளது. சுற்றுலா என்பதை “சுற்றிப்பார்த்தல்” அல்லது ”ஓர் இடத்திலிருந்து இன்னுமோர் இடத்தினைப் பார்வையிடப் பயணமாதல்” எனச் சுருக்கமாக வரையறை செய்யலாம். இந்துகலாசாரச் சுற்றுலா என்பது இந்துக்களின் புனிதத்தலங்கள், விழாக்கள், கலைகள், பழக்கவழக்கங்கள், நினைவுச்சின்னங்கள் போன்றவற்றைக் கண்டுகளிப்பதற்காக மேற்கொள்ளுகின்ற பயணங்களாகும். இந்துக்கலாசரச் சுற்றுலாவினை விரும்பும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இராமாயணத்துடன் தொடர்புபட்ட சுற்றுலா மையங்களைப் பார்வையிடுதலில் அதிக ஆர்வம் காட்ட்டி வருகின்றனர். இந்தியாவில் தோன்றிய இந்துசமயம் எமது நாடான இலங்கையிலும் பரவியது யாவரும் அறிந்ததே. அந்தவகையில் இந்துக்களின் புனித இலக்கியங்களுள் ஒன்றான வான்மிகியால் பாடப்பட்ட இராமாயணத்திற்கும் இலங்கைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இதனால் இராமாயணக் கதையுடன் தொடர்புபட்டதாக இலங்கையின் நுவரெலியா சீதையம்மன் கோயில், ஹக்கல பூங்கா மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர தீர்த்தக்கேணி, திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று முதலான பல இடங்கள் காணப்படுகின்றன. அவ்வாறான இடங்கள் இன்று சுற்றுலாவியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. உள்நாட்டவர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் அதிகம் சுற்றுலாப் பயணம் செல்லும் இடங்களாக இராமாயணத்துடன் தொடர்புடைய மேற்குறிப்பிட்ட சுற்றுலா மையங்கள் விளங்குகின்றன. ஆகவே இலங்கையில் காணப்படும் இராமாயணச் சுற்றுலா மையங்களை இனங்கண்டு அவை பற்றிய வரலாற்றினையும், இந்துக்கலாசாரச் சுற்றுலாவியலில் அவை பெறுகின்ற முக்கியத்துவத்தினையும் வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வில் வரலாற்றியல் ஆய்வு அணுகுமுறையும் விபரண ஆய்வு அணுகுமுறையும் பயன்படுத்தப்படுகின்றன.

Description

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By