சிவத்தம்பி மார்க்சியவாதி அல்லர்; மார்க்சிய ஆய்வாளர்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Puthiya Panuval An International Journal of Tamil Studies
Abstract
பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் நினைவுகளை மீட்கும் வாய்ப்பு மீள ஒரு தடவை கிடைத்துள்ளது. அவர் அமரத்துவம் அடைந்த நாட்களில் சில மேடைகளிலும் 'இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அஞ்சலி நிகழ்விலும் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. அவ்வாறே அவரது நினைவுகளைப் பதிவு செய்யக் கிடைத்த சந்தர்ப்பத்தினை மிக உயர்வாகக் கருதுகிறேன். பேராசிரியரின் நினைவுகளை ஒரு மாணவனாக, சக விரிவுரை யாளனாக, நண்பனாகப் பார்க்க முயலுகின்றேன். பேராசிரியரின் பிறப்புப் பற்றிய செய்தியுடன் அவரது நினைவு களைப் பதிவு செய்ய முயலுகின்றேன். அவரது பிறப்புக்கும் பெயருக்கும் தனித்துவமான அங்கீகாரம் கிடைத்துள்ளதென்றே நாம் எப்போதும் கருதுவதுண்டு. செல்லப்பா சுவாமிகளின் சீடரான சிவயோக சுவாமிகள் ஈழத்துச் சித்தர்களின் வரிசையில் மிகவும் சிறப்பாகப் பேசப்படுபவர். அவரை வழிபடும் மரபு ஈழத்தில் இன்றும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் செல்லும் எவரும் சுவாமிகளைத் தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியாது. அத்தகைய மரபு வழியில் பேராசிரியரின் தந்தையாராகிய கார்த்திகேசுவும் சிவயோக சுவாமிகளைத் தரிசிப்பது வழமை. அவ்வாறு ஒரு தடவை சுவாமிகளைப் பேராசிரியரின் தந்தையார் தரிசிப்பதற்காகச் சென்றிருந்த வேளையில், சிவயோக சுவாமிகள் கார்த்திகேசுவை பார்த்து "உனக்குச் சிவத்தம்பி பிறந்திருக்கிறான் போய்ப் பார்" என்றார். மகிழ்ச்சியடைந்த பேராசிரியரின் தந்தையார் சிவயோக சுவாமிகளின் வாய்வழி வந்த பெயரான 'சிவத்தம்பி' எனும் நாமத்தைப் பேராசிரியருக்குச் சூட்டியதாக அவரது துறைசார்ந்த பேராசிரியர் சிவலிங்கராசா, பேராசிரியரின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் தெரிவித்தார். ஈழத்துப் பத்திரிகைகளிலும் இந்தச் செய்தி வெளிவந்துள்ளது.